மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக தேசிய விருது பெற்ற நடிகர் பிஜூ மேனன், மலையாளத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நிலையில், தற்போது 14 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்டரி ஆக உள்ளார்.
மலையாளத்தில் துணை நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்த பிஜூ மேனன், 2005-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான மஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஜூன் ஆர், தம்பி, அகரம் பழனி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இதில் கடந்த 2008-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான அரசாங்கம் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார்.
அதன்பிறகு கிருஷ்ணா நடிப்பில் வெளியான அலிபாபா படத்தில் நடித்திருந்த பிஜூ மேனன், தமிழில் கடைசியாக போர்க்களம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை என்றாலும், மலையாளத்தில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் பிஜூ மேனன் 14 வருட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் எஸ்.கே 23 படத்தில் பிஜூ மேனன் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது.
தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்.கே.23 படத்தில் பிஜூ மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஒரு வருத்திற்கான கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இந்த படத்தில் அவரது கேரக்டருக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸின் என்வி பிரசாத் தயாரிக்கும் இந்த படத்தில் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“