நாட்டின் முன்னாள் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு தனிப்பட்ட உத்தரவாதங்களில் வழங்கப்பட்ட கடன்களை மீட்டெடுக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முயற்சித்து வருகிறது. அதன் மதிப்பு சுமார் 158 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் வலைதளத்தில் உள்ள தகவலின் படி, தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் அனில் அம்பானிக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொடுத்திருக்கும் கடன்களை, அவரிடம் இருந்து வசூலித்து தருமாறு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் லிமிடெட் நிறுவனங்களின் கடன் தொடர்பாக அனில் அம்பானி பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனில் அம்பானி, ஆசியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் ஆவார். முகேஷ் அம்பானி கடந்த காலங்களில் தனது சகோதரர் சிக்கலில் இருந்த போது உதவியுள்ளார். அப்போது, அனில் அம்பானி சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு வழக்கில் கடைசி நிமிடத்தில் அவருக்கு பண உதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கி திவால் சட்டத்தின் தனிப்பட்ட உத்தரவாத பிரிவின் கீழ் இந்திய மதிப்பில் ரூ. 12 பில்லியன் ( 158 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மீட்க முயற்சித்து வருவதாக பிடிஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராடெல் நிறுவனத்தால் பெறப்பட்ட பெருநிறுவன கடனுடன் தொடர்புடையது, இது அனில் அம்பானியின் தனிப்பட்ட கடன் அல்ல . மேலும், இதற்காக தீர்ப்பாயத்திற்கு தக்க பதில் வழங்கப்படும் என்று அனில் அம்பானியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.