ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் உள்ள 50 டாலர் நோட்டுக்களில், responsibility என்பதில் எழுத்துப்பிழை இருந்தது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக, 4 கோடியே 60 லட்சம் எண்ணிக்கையிலான நோட்டுகள் அழிக்கப்பட்டு எழுத்துப்பிழை திருத்தப்பட்டு புதிய 50 டாலர் நோட்டுகளாக வரும் என்று அந்நாட்டு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் சுமார் 11 ஆயிரம் கோடி (2.3 பில்லியன்) மதிப்பில் 4 கோடியே 60 லட்சம் (46 மில்லியன்) எண்ணிக்கையில் மஞ்சள் நிறத்திலான 50 டாலர் நோட்டுக்கள் அச்சிடப்பட்டன. இந்த டாலர் நோட்டின் ஒரு பக்கத்தில் அந்நாட்டு பார்லிமென்டின் முதல் பெண் எம்.பி.,யான எடித் கோவானின் முதல் உரை சிறிய எழுத்துகளில் இடம்பெற்றிருந்தது.
அந்த உரையில், பொறுப்புணர்வு என பொருள்படும் ‘responsibility’ என்ற வார்த்தை, எழுத்துப் பிழையுடன் ' responsibilty’ தட்டச்சு செய்யப்பட்டிருப்பதை ஒருவர் ரேடியோவில் தெரிவித்திருந்தார். அந்த ரேடியோ நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 டாலர் நோட்டுகளில் உள்ள எழுத்துப்பிழையை புகைப்படம் எடுத்து பதிவிட்டது.
இதனையடுத்து 50 டாலர் நோட்டுக்களை ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி ஆய்வு செய்தது. பின்னர் அந்நாட்டு ரிசர்வ் வங்கி, 50 டாலர் நோட்டுகளில் எழுத்துப் பிழை இருப்பதை உறுதி செய்தது. இதன்பின்னர் 50 டாலர் நோட்டுக்களில் உள்ள எழுத்துப்பிழை விரைவில் சரிசெய்யப்பட்டு புதிய 50 டாலர் நோட்டுக்கள் வெளிவரும் என்று அந்நாட்டு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- குமரன் பாபு