10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இனி 4 வங்கிகளாக இயங்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். இந்த நடவடிக்கையால் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த வங்கிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisment
மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கையை எதிர்த்தும், வங்கிகளை முழுக்க முழுக்க தனியார் மயமாக்கும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த செயலை கண்டித்தும் அகில இந்திய அளவில், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இன்று(அக்.22) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டத்தை தவிர்ப்பதற்காக மத்திய அரசின் தொழிலாளர்துறை ஆணையர் தலைமையில் டெல்லியில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஆனால், இதில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரேயொரு ஆறுதலான விஷயம் என்னவெனில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) ஆகிய இரு வங்கி ஊழியர்கள் மட்டும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த தகவலை AIBEA நிர்வாகி எஸ்பி ஷர்மா பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆன்லைனிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வேலை நிறுத்தத்தால், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி), இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த அலகாபாத் வங்கி ஆகிய ஐந்து வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவிர இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியின் செயல்பாடும் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.