Business news in tamil : ஆர்.பி.ஐ. ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை அன்று ஐ.எம்.பி.எஸ். முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய உச்ச வரம்பாக அறிவிக்கப்பட்ட ரூ. 2 லட்சத்தை ரூ. 5 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவையை பயன்படுத்தி நம் நாட்டில் இருக்கும் எந்த நபருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பிக் கொள்ள இயலும். இந்த புதிய அறிவிப்பு தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய விசயங்கள் என்ன என்பதை நாம் இங்கே பார்ப்போம்
இண்டெர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் செயலிகள், வங்கிக் கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.கள் மூலமாக நீங்கள் ஐ.எம்.பி.எஸ் சேவையை பயன்படுத்தி இனி நீங்கள் 5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யவதற்கான முன்மொழிவை வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
எஸ்.எம்.எஸ். மற்றும் ஐ.வி.ஆர்.எஸ். மூலமாக நீங்கள் ரூ. 5000 வரை ஐ.எம்.பி.எஸ். சேவையை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
பி.ஒ.எஸ் மற்றும் க்யூ.ஆர். கோட்கள் மூலமாக பி.ஏ.( payments acceptance) அதிக அளவில் கிடைப்பதை உறுதி செய்ய ஜியோ-டேக்கிங் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் ஆட்டோ டெபிட் விதிகளின் திருத்தப்பட்ட செயல்முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி. டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகள் மூலம் ரூ. 5000 மற்றும் அதற்கு மேலே தொடர்ந்து மீண்டும் மீண்டும் செலுத்தப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை இனி 24 மணி நேரத்திற்கு முன்பே வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிகப்பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்காக ஆர்.டி.ஜி.எஸ். நாள் முழுவதும் செயல்படும் வகையில் கொண்டு வரப்பட்டது. இந்த நடவடிக்கை நாட்டின் நிதிச் சந்தைகளின் உலகளாவிய ஒருங்கிணைப்பை நோக்கமாகக் கொண்ட தற்போதைய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டது. மேலும் இது சர்வதேச நிதி மையங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை எளிதாக்குவதுடன், உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பரந்த கட்டண நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil