ஆர்.சந்திரன்
விமானத்தில் பயணிப்பவர்களுக்கு அதிவேக இணைய வசதியும், தடையில்லாத டேட்டா சப்ளையும் கிடைக்கச் செய்ய, சர்வதேச அளவில் செயல்படும் சில நிறுவனங்கள் சேர்ந்து, புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன.
சீம்லஸ் அலையன்ஸ் என்ற பெயரில் செயல்பட உள்ள இந்த கூட்டணியில் ஒன்வெப், ஏர்பஸ், டெல்டா, ஸ்பிரின்ட் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின்படி, விமானத்தில் பயணிக்கும்போதும், மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு தேவையான டேட்டா தடையில்லாமல், வேகமாகவும் கிடைக்கச் செய்ய செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தை நாட இருக்கிறோம். இதனால், டேட்டா பகிர்வில் தேவைப்படும் பல்வேறு கட்டமைப்பு, அதன் நிர்மானம், அதற்கான கணக்கிலடங்காத செலவு போன்றவற்றை தவிர்க்க முடியும் என நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீம்லஸ் அலையன்ஸ் எனப்படும் இந்த கூட்டணியில் இடம்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்துள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தெற்காசியா மற்றும் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல், இதனால் உலகம் முழுவதும் உள்ள 37 கோடிக்கும் அதிகமான எர்டெல் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்த சேவை வெகுவிரைவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.