சத்யம் திரையரங்கம் : தென்னிந்தியாவின் மிகப் பெரிய திரையரங்கு நிறுவனம் தான் எஸ்.பி.ஐ சினிமாஸ். எப்போது புதுப்படம் வெளியானாலும் பத்து நகரங்களில் சுமார் 76 திரைகளில் படத்தினை வெளியிடும் நிறுவனம் எஸ்.பி.ஐ.
சத்யம் திரையரங்கம்
இந்த எஸ்.பி.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான திரையரங்கு தான் சத்யம் திரையரங்கம். ராயப்பேட்டையில் இருக்கும் சத்யம் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
பேலாஸ்ஸோ, எஸ்கேப், ராயப்பேட்டை சத்யம், சத்யம் எஸ்2 பெரம்பூர், எஸ்2 தியாகராஜா என சென்னையில் மட்டும் ஐந்து இடங்களில் எஸ்.பி.ஐ சினிமாஸ் -இன் ஐந்து திரையரங்குகள் உள்ளன.
இதை தவிர்த்து புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் இதன் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சத்யம் திரையரங்கம் பங்குகளை வாங்கும் பிவிஆர் சினிமாஸ்
இந்நிலையில் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் எஸ்பிஐ சினிமாஸின் 77.1 சதவீதம் பங்குகளை விலைக்கு வாங்கியுள்ளது.
பிவிஆர் சினிமாஸ் உலகின் 7வது பெரிய சினிமா நிறுவனமான இது உலகம் முழுவதும் 60 நகரங்களில் நிறுவனங்களை வைத்து 152 திரையரங்குகளை இயக்கி வருகிறது பிவிஆர் சினிமாஸ். இதில் சுமார் 706 திரைகளில் படங்கள் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சத்யம் திரையரங்கின் நிறுவனமான எஸ்பிஐயின் பங்குகளை ரூ.633 கோடிக்கு பிவிஆர் வாங்கியுள்ளது. இதனால் பிவிஆர் சினிமாஸ்ஸின் திரையரங்குகள் மற்றும் திரைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
இன்னும் 30 நாட்களுக்குள் பிவிஆர் சினிமாஸ் எஸ்பிஐக்கு பணத்தினை கொடுத்துவிடும். இதன் பின்னர் 12 மாத கால இடைவேளைக்குள் தங்களுடைய திரையரங்குகளை ஒப்படைக்க திட்டமிட்டிருக்கிறது எஸ்பிஐ.
பெயர் மாற்றம் செய்யப்படுமா?
சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் சத்யம் தியேட்டர் மக்களுக்கு பிடித்தமான ஒரு திரையரங்காகும். ஆகவே எக்காரணம் கொண்டும் திரையரங்கின் பெயரினை மாற்றமாட்டோம் என பிவிஆர் சினிமாஸ் கூறியிருக்கிறது.