இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (ஜூல15) ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகிவருகின்றன.
பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான காரணிகள்:-
பொதுவாக இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்வை கொடுக்கவில்லை. வங்கி பங்குகளின் அதீத விற்பனை காரணமாக பங்குச் சந்தைகள் எதிர்மறையாகவே காணப்பட்டன.
குறிப்பாக கடந்த 4நாள்களாக வர்த்தகம் இறங்குமுகமாகவே இருந்தது. இதற்கு சர்வதேச அளவில் பல்வேறு காரணிகள் கூறப்பட்டாலும், அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ):-
இதுமட்டுமின்றி ஐரோப்பிய சந்தைகளும் பலவீனமாக காணப்படுகின்றன. இந்த நிலையில் இன்றைய வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின்போது பங்குச் சந்தைகள் காலை முதலே உயர்வில் வர்த்தகம் ஆகின.
அந்த வகையில் தற்போது மும்பை பங்குச் சந்தை 94.7 புள்ளிகள் (0.18 சதவீதம்) வரை உயர்ந்து 53,508.60 என வர்த்தகம் ஆகிவருகிறது. பாலிசிபஸார், அதானிகிரீன், டாடா ஸ்டீல், டிசிஎஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட பங்குகள் லாபத்தில் வர்த்தகம் ஆகிவருகின்றன. காஸ்மோஃபிலிம்ஸ் மற்றும் பாலிசிபிலஸ் உள்ளிட்ட பங்குகள் இழப்பீடை சந்தித்து வருகின்றன.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ):
தேசிய பங்குச் சந்தையை பொருத்தமட்டில் நிஃப்டி 14.60 (0.09 சதவீதம்) வரை உயர்ந்து வர்த்தகம் ஆகிவருகிறது. நேற்றைய தினம் வியாழக்கிழமை வர்த்தகத்தின்போது, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவை சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில் 666 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. வீழ்ச்சிப் பட்டியலில் 1268 பங்குகள் காணப்பட்டன. எனினும் உள்நாட்டு சந்தையில் பங்குகள் விற்பனை சூடுபிடித்தது.
இதற்கு ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சுணக்கமே காரணம் ஆகும். மேலும் முன்பேர வர்த்தகத்தின் வாராந்திர கான்ட்ராக்டுகள் கணக்கு சமர்பிப்பும் ஒரு காரணம் என பொருளாதார வல்லுநகர்கள் கூறுகின்றனர்.