இந்திய அஞ்சல் அலுவலகங்களில் ஒருவர் தனது முதலீட்டு நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
இந்தத் திட்டங்கள் முதலீடு நோக்கத்தோடு, வரி விலக்கு சலுகைகளையும் வழங்குகின்றன. அந்த வகையில், “வருமான வரிச் சட்டத்தின் 80C இன் படி வரிச் சலுகைகளை வழங்கும் 5 அஞ்சல் அலுவலக திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
1) தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC)
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) என்பது நிலையான வருமான முதலீட்டுத் திட்டமாகும். இந்திய அரசின் ஆதரவுடன், இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
அதிகபட்ச வரம்பு இல்லாமல் ஆரம்ப முதலீடாக 100 ரூபாய் வரை சிறிய அளவில் முதலீடு செய்யலாம். இந்த வைப்புத்தொகை வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் விலக்கு பெறத் தகுதி பெறும்.
2) பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மீதான வட்டி விகிதம் ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆபத்து மிக குறைவு அல்லது பூஜ்யமாக உள்ளது.
80C இன் கீழ் விலக்கு பெற தகுதியுடைய இத்திட்டத்தில் ஒருவர் ரூ.500 முதல் ரூ.1.50 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் முதலீடு செய்யலாம்.
3) தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (TD)
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் பல்வேறு காலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும், தபால் அலுவலக நேர வைப்புத்தொகை போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. குறைந்தபட்ச முதலீடு ரூ .1000 ஆகும்.
அதேபோல் அதிகப்பட்ச முதலீடுக்கு வரம்பு இல்லை. தற்போதைய விகிதங்களின்படி 5 வருட கால வைப்புத்தொகை இந்த காலாண்டில் 7 சதவீதமாக உள்ளது.
4) சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)
சுகன்யா சம்ரித்தி யோஜனா பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக சிறுசேமிப்பு திட்டம் ஆகும். இது தமிழ்நாட்டில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.250 மற்றும் அதிகபட்சமாக ரூ.1,50,000 வைப்புத்தொகை இத்திட்டத்தில் அனுமதிக்கப்படுகிறது.
5) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
55 வயதுக்கு அதிகமான ஓய்வு பெற்ற நபர்கள் அல்லது 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் இந்தக் கணக்கில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ரூ.1000 முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்துக் கொள்ளலாம்.
இந்தப் பணத்துக்கு 80சியின் படி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், கணக்கை முன்கூட்டியே மூடுவது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/