தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகள் அனைவரும் பள்ளிப் படிப்பை தடையின்றி நிறைவு செய்வதை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு செய்லபடுத்தி வரும் நலத்திட்ட கல்வி உபகரண பொருட்களை மறுஆய்வு செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, 1ம் முதல் 8 வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு இணைச் சீருடைகள் , 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறிப்பேடுகள், 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலணி, 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், பேருந்து பயண அட்டை மற்றும் பல கல்வி உபகரண பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
கல்வி சேவையை மிக உன்னதமான வகையில் முழுமையாக அளிக்கவும், தரமான கல்வியை உறுதி செய்யவும், மாறும் கால சூழலுக்கு ஏற்ப மாணவர்களின் தேவையறிந்து கல்வி உபகரணப் பொருட்களை அளிக்கவும் உயர்மட்டக் குழு பரிசீலித்து வருகிறது.
கொரோனாவுக்குப் பிந்தைய காலங்களில் பள்ளிக்கல்வியில் மடிக்கணினி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆன்லைன் வீடியோ, இ- புத்தகம், ஆன்லைன் செமினார், வை- பை இணைப்பு, உள்ளிட்ட அதிநவீன சேவைகளுடன், மெம்மரி அதிகம் கொண்ட மடிக்கணினியை வழங்கவும் குழு யோசித்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil