Advertisment

TNPSC Group 4: செம போட்டி உறுதி... தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க?

How to prepare TNPSC group 4 VAO exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; தேர்வுக்கு தயாராவது எப்படி என்பது குறித்து இங்கே.

author-image
Ambikapathi Karuppaiah
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group 4: செம போட்டி உறுதி... தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க?

குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்வு தயாராவது எப்படி என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் தேர்வு தான் இந்த குரூப் 4 தேர்வு. தற்போது இந்த தேர்வுகள் மூலமே விஏஓ பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த குரூப் 4 தேர்வு, அரசு வேலைக்காக ஏங்குபவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கான முதன்மை காரணம், இந்த தேர்விற்கான குறைந்தப்பட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது தான். அடுத்ததாக, ஒரேயொரு எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அரசு வேலை கனவு நனவாகிடும். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனால் இப்போது வரக்கூடிய குரூப் 4 தேர்வுகளில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் குரூப் 4 தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு தேர்வு நடைபெறாததால், இடைப்பட்ட காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்களும், இந்த ஆண்டு தேர்வில் கலந்துக் கொள்வர். எனவே தேர்வு போட்டி மிகுந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. எனவே குறைந்த கால இடைவெளியில், தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் பதவிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

பதவிகள்

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)

அடுத்ததாக குரூப் 4 தேர்வுக்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

கல்வித் தகுதி

இந்த குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் குரூப் 4 தேர்வை எழுதலாம். தமிழ்நாடு அரசு விதிகளின் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.

இப்போது குரூப் 4 தேர்வின் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் குறித்து பார்ப்போம்.

தேர்வு முறை

குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும்.

அ. மொழிப்பாடம்

முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளில், இந்த பகுதி விருப்ப மொழிப் பாட பகுதியாக இருந்தது. அதாவது தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்காது. இருப்பினும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இதனால், தமிழ் மொழிப் பாடப் பகுதியில் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் தமிழ் மொழிப் பாடப் பகுதி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக உள்ளது. எனவே தமிழ் மொழிப் பாட பகுதி மதிப்பெண்களும் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம்.

தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

ஆ. பொது அறிவு

அடுத்தப்படியாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.

தேர்வுக்கு தயாராவது எப்படி?

தமிழ் மொழிப் பாடப் பகுதியைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. தற்போது தமிழ் மொழிப் பாடப்பிரிவை தகுதித் தேர்வாக நிர்ணயித்துள்ளதால், பாடத்திட்டத்தில் மாற்றம் வந்தாலும் வரலாம். ஆனால் தேர்வாணையம் அட்டவணை வெளியீட்டின்போது பாடத்திட்டம் குறித்து எந்த கருத்து தெரிவிக்காததால், பெரிய அளவிலான மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. தற்போதைய தமிழ் மொழிப் பாடப்பிரிவுக்கு, தேர்வாணையத்தின் பாடத்திட்டத்திலுள்ள தலைப்புகளுக்கு ஏற்றவாறு தயாராக வேண்டும். இருப்பினும், இந்த தலைப்புகளிலிருந்து கேட்கப்படும் வினாக்கள், 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளிப் பாட புத்தகங்களிலிருந்தே கேட்கப்படுகின்றன. எனவே 6 முதல் 10 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் புத்தகங்களை படித்துக் கொள்வது நல்லது. தேவைப்பட்டால், நேரம் இருந்தால் 11 மற்றும் 12 வகுப்பு தமிழ் புத்தகங்களையும் படித்துக் கொள்ளலாம். மொழிப்பாடங்களே நமக்கு எளிதாக அதிக மதிப்பெண்களை பெற்றுத்தருவன. நாம் பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக படித்தாலே இப்பகுதியில் 90 முதல் 95 மதிப்பெண்கள் பெறலாம்.

அடுத்ததாக பொது அறிவு பகுதியில் 100 வினாக்களில் 75 வினாக்கள் பொது அறிவாகவும், 25 வினாக்கள் திறனறி வினாக்களாகவும் இடம் பெறும். இதில் பொது அறிவு வினாக்களுக்கு, 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். இப்பகுதியைப் பொறுத்தவரை பெரும்பாலும் பள்ளிப் புத்தகங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. பள்ளிப் புத்தகங்களில் இல்லாத பாடத்திட்டத்தின் தலைப்புகளுக்கு கூடுதலான ஆதாரங்களை தேடிப் படித்துக் கொள்ளலாம்.

நடப்பு நிகழ்வுகளுக்கு (Current Affairs) தேர்வு அறிவிப்புக்கு முன் ஆறு மாதம் முதல் 1 வருடம் வரையிலான செய்திகளை படிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நடப்பு நிகழ்வுகளுக்கு ஒதுக்கி படிப்பது சிறந்ததாக இருக்கும்.

அடுத்ததாக முக்கியமான பகுதியும், தேர்வர்களில் அநேகம் பேருக்கு கடினமான பகுதியாகவும் இருப்பது கணிதப் பகுதி தான். இப்பகுதிக்கு 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள கணித பாடங்களை நன்கு படிக்க வேண்டும். தினமும் 1-2 மணி நேரம் ஒதுக்கி கணித பாடங்களை பயிற்சி செய்ய வேண்டும். தினமும் பயிற்சி பெற்றாலே கணித வினாக்களுக்கு தீர்வு காண முடியும்.

குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப் புத்தகங்களை ஒட்டியே உள்ளதால், பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment