இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சிலர் கூறிவரும் தவறான தகவல்களை மறுத்துள்ள அவர், தொடக்கத்தில் 12 இந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். பின்னர் படிப்படியாக 8-வது அட்டவணையில் உள்ள மற்ற மொழிகளும் சேர்க்கப்படும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் தெரிவிக்கையில் ," மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்தேர்வு நடைமுறைகளில் நிலைமாற்றத்துக்கான சீர்திருத்தங்களை உருவாக்கும் வகையில் தேசிய ஆள்தேர்வு முகமை ஒன்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமநிலையிலான போட்டி வாய்ப்பை உருவாக்கும் வகையில், பி மற்றும் சி பிரிவில் வரும் (தொழில்நுணுக்கம் சாராத) பணிகளுக்கு மாணவர்கள் தகுதிப்பட்டியலை (screen/shortlist) தயாரித்தலுக்கு, பொது தகுதித் தேர்வை (National Recruitment Agency - NRA) தேசிய ஆள்தேர்வு முகமை (Common Eligibility Test (CET) என்ற பன்முக முகமை நடத்தும் .
பொதுத் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பணியாளர் தேர்வு அமைப்புகளுடனும், பொதுத்துறை நிறுவனங்களுடனும் பகிர்ந்துகொள்ளப்படும், பின்னர் தனியார் துறையினருடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று கூறினார். இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்டவற்றின் பணியாளர் தேர்வு முகமைகளுக்கு பணியாளர் தேர்வுக்கான செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும் என்று அவர் கூறினார். அதே போல, வேலை தேடும் இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் செலவைக் குறைப்பதாகவும் அமையும் என்று அவர் தெரிவித்தார்.
பொதுத் தகுதித்தேர்வு மதிப்பெண்களை இந்த முகமைகள் மற்றும் அமைப்புகள் பயன்படுத்திக் கொள்வதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும் என்று டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மேலும், வேலை வழங்குவோர், பணியாளர்கள் என இருதரப்புக்கும் பலன் அளிக்கும் வகையில் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
சில மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் பின்பற்றும் குடியேற்றம் போன்ற தேர்வுக்கான விதிகளுடன் தொடர்பு இல்லாததாக பொதுத் தகுதித்தேர்வு இருக்க வேண்டும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " எஸ்.எஸ்.சி., ரயில்வே ஆள் தேர்வு வாரியங்கள் மற்றும் ஐ.பி.பி.எஸ். சார்பில் நடத்தப்படும் பட்டதாரி, மேல்நிலை (12 ஆம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் மெட்ரிகுலேட் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) என்ற மூன்று நிலைகளில் தொழில் நுணுக்கம் அல்லாத பணிகளுக்கான பொது தகுதித் தேர்வுகளை என்.ஆர்.ஏ. நடத்தும். செட் (சி.இ.டி.) மதிப்பெண் அளவின் அடிப்படையில் முதல்நிலைத் தேர்வு முடிந்த பிறகு, சிறப்புத் தேர்வு முறைகளின் (நிலை 2, நிலை 3) அடிப்படையில் அந்தந்த ஆள்தேர்வு முகமைகள் ஆள் சேர்க்கைப் பணிகளைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு முறை இதில் தேர்வுகள் நடைபெறும் என்றும், அந்த மதிப்பெண்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.
இந்தத் தேர்வை எத்தனை முறை எழுதலாம் என்பதற்கான வரையறை எதுவும் கிடையாது. வயது வரம்புத் தகுதி உள்ள வரையில் இத் தேர்வை எழுதலாம். அமலில் இருக்கும் அரசுக் கொள்கைகளுக்கு ஏற்ப எஸ்.சி. / எஸ்.டி. / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்படும் என்று முன்னதாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.