TN Schools Reopening: இந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றதை முன்னிட்டு, அதற்கு ஒரு வார காலம் முன்னதாகவே பள்ளிகளில் தேர்வுகளை முடித்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியோடு பள்ளிகளில் தேர்வுகள் முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, வரும் ஜூன் 3ஆம் தேதியன்று விடுமுறை முடிந்து அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அரசு, பள்ளி திறப்பு தேதியை மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. தற்போது வரை, தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால், மேலும் 2 வாரங்கள் விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
ஆனால், விடுமுறையைத் தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்த தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பு தாமதமாகும் என்று வெளியான செய்திகள் தவறானது என்றார்.
அதேசமயம், வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் ஜூன் 3க்கு பதில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க 210 நாட்கள் தேவைப்படும் என்பதால் தான் ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆகையால், கண்டிப்பாக அன்றைய தினம் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.