தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் நுழைவுத் தேர்வு மூலம் 11ம் வகுப்பு மாணவர்கள் சேரக்கையை நடத்திட தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19ம் தேதி முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும், தமிழகத்தில் ஒன்பது மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் திறக்கப்பட்டன.
கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு ரத்து செய்த போது, மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட்டது.
ஆனால், இந்தாண்டு கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் கல்வி என்பதால் வருகைப்பதிவும் கட்டாயப்படுத்தவில்லை. எனவே, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஒரு குழப்பமான சூழல் இருந்து வந்தது.
9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? தேர்வு ரத்தால் பாதிப்புகள் என்ன?
இந்நிலையில், சிறப்பு நுழைவுத் தேர்வு மூலம் 11ம் வகுப்பு மாணவர்கள் சேரக்கையை நடத்திட தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இதில், பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிகின்றன .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“