கடந்த ஐந்து வருடங்களாக பொறியியல் படிப்புகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. நான்கு சுற்று கவுன்சிலிங் முடிந்துள்ள நிலையில் மொத்தம் 89,187 இடங்கள் (59%) நிரப்பப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 13% அதிகம். காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 21,000 அளவிற்கு குறைந்து 62,683 ஆக உள்ளது.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) குழு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 17 வரை நான்கு சுற்றுகளாக பொது ஆன்லைன் கவுன்சிலிங்கை நடத்தியது. இதில் 440 கல்லூரிகளில், பத்து அரசு பொறியியல் நிறுவனங்களில் மட்டுமே 100% இடங்கள் நிரம்பியுள்ளது. அவற்றில் கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை அடங்கும். இந்த ஆண்டு 113 கல்லூரிகளில் 80% க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 59 கல்லூரிகளில் மட்டுமே 80% இடங்கள் நிரம்பின. இந்த ஆண்டு 223 கல்லூரிகளில் 50% க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 139 கல்லூரிகளில் மட்டுமே 50% இடங்கள் நிரம்பின. 92 கல்லூரிகளில் 20% க்கும் குறைவான இடங்களும், 56 கல்லூரிகளில் 10% க்கும் குறைவான இடங்களும் நிரம்பியுள்ளது. ஆறு கல்லூரிகளில் இந்த ஆண்டு ஒரு மாணவர் கூட சேரவில்லை.
முன்னதாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் கீழ், 7,324 இடங்கள் நிரப்பப்பட்டன மற்றும் 473 இடங்கள் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட்டன.
துணை கவுன்சிலிங் இன்னும் நடத்தப்படாத நிலையில், இன்னும் சில நூறு இடங்கள் நிரப்பப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பல மாணவர்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்களைப் பெறுவது உட்பட பல சவால்கள் இருந்தபோதிலும், ஆன்லைன் கவுன்சிலிங் செயல்முறை இந்த ஆண்டு சீராக சென்றது, என்று TNEA தரப்பில் கூறப்படுகிறது.
கணினி அறிவியல் பொறியியல் (Computer Science), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (ECE) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) ஆகியவை இந்த மாணவர்களுக்கு மிகவும் விருப்பமான படிப்புகளாக இருந்தது. மெக்கானிக்கல் மற்றும் சிவில் ஆகியவை குறைந்த விருப்பமான படிப்புகள். அதிலும், இந்த ஆண்டு 100 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் ஒற்றை இலக்க சேர்க்கை மட்டுமே உள்ளது, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
கொரோனா தொற்றுநோய்களின் போது ஐடி நிறுவனங்களால் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றதால் பொறியியல் சேர்க்கை அதிகரித்துள்ளது. கவுன்சிலிங்கில் மாணவர்கள் படிப்புகளை விட கல்லூரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர், இதன் விளைவாக இந்த ஆண்டு 80% க்கும் அதிகமான இடங்களை நிரப்பிய கல்லூரிகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக அதிகரித்தது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், 20% க்கும் குறைவான சேர்க்கை உள்ள கல்லூரிகள் நல்ல உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களை வழங்க முடியாது. இதுபோல் 100 கல்லூரிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தி வருகின்றன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் இக்கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற மாற்று திட்டங்களை கொண்டு வர வேண்டும். மாநில அரசு இந்தக் கல்லூரிகளை மூடிவிட்டு மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.