Advertisment

TNPSC Group 2: பட்டதாரிகளுக்கு சூப்பரான வாய்ப்பு; A to Z தகவல்கள்

TNPSC group 2 exam qualification syllabus details for aspirants: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு; தகுதிகள், தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்

author-image
Ambikapathi Karuppaiah
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group 4: இந்த முறை டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் லீக் ஆகாது; பிளான் இதுதான்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில், குரூப் 2 தேர்வுக்கான தகுதிகள், பாடத்திட்டம், உள்ளிட்ட தேர்வர்களுக்கான முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), பல்வேறு வகையான பதவிகளுக்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் இதர தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 தேர்வு முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. குரூப் 2 தேர்வானது நேர்முத் தேர்வு உள்ள பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள் என இருவிதமான பதவிகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரூப் 2 தேர்வுகளில் 5831 காலியிடங்கள் நிரப்பட உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 2 பதவிகள்

நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

அதே சமயம், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி

குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

குரூப் 2 பதவிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 20 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. சில பதவிகளுக்கு குறைந்தப்பட்ச வயது தகுதி மாறுபாடும்.

தேர்வு முறை

குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.

முதல்நிலைத் தேர்வு

முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு பகுதியில் (பட்டப்படிப்புத் தரம்) 175 வினாக்களும் கணிதப் பகுதியில் (பத்தாம் வகுப்புத் தரம்) 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணிநேரம்.

முதல்நிலைத் தேர்வு கொள்குறிவகைகளுக்கான தலைப்புகள்

பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறி வினாக்கள் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

முதன்மை தேர்வு

முதன்மைத் தேர்வில் பகுதி ‘அ’ மற்றும் பகுதி ‘ஆ’ என இரு பகுதிகள் உள்ளது. இதற்கான கால அளவு 3 மணிநேரம்.

முதன்மை தேர்வுக்கான தலைப்புகள் (விரிவான எழுத்துத் தேர்வு)

பகுதி ’அ’

  1. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
  2. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்

இப்பகுதியில் மொத்தம் நான்கு வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 25 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண். இப்பகுதியில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் கண்டிப்பாக எடுக்க வேண்டும். இல்லையெனில், குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின் பகுதி ‘ஆ’ விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது

பகுதி ‘ஆ’

  • சுருக்கி வரைதல் (Precis Writing)
  • பொருள் உணர்திறன் (Comprehension)
  • சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் (Hints Developement)
  • திருக்குறளிலிருந்து கீழ்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்

 மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம், அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை, மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம், திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை, சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு, திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்

  • கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)

பகுதி ‘ஆ’ வில் மொத்தம் 10 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 20 மதிப்பெண் வீதம் மொத்தம் 200 மதிப்பெண். குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் எதுவும் இப்பகுதிக்கு இல்லை. இப்பகுதி முழுவதும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க வேண்டும்

தேர்வுக்கான பாடத்திட்டம்

தமிழ்நாட்டின் வரலாறும், மரபும், பண்பாடும்

தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்மொழி வளர்ச்சியில் சங்க கால இலக்கியமும் வரலாற்றுச் சான்றுகளும், தமிழ்நாட்டின் இசை மரபு, நாடகக்கலை, சமூகப் பொருளாதார வரலாறு, பகுத்தறிவு இயக்கங்கள், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு, பெண்ணியம், இக்காலத் தமிழ்மொழி ஆகிய தலைப்புகளின் கீழ் வினாக்கள் கேட்கப்படும்.

முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் குரூப் 4 தேர்வுகளைப் போலவே குரூப் 2 தேர்வும் அதிக தேர்வர்கள் எழுதக்கூடிய தேர்வாகும். பட்டப்படிப்பு தகுதி இருந்தால், அரசுத் துறைகளில் அலுவலர் பதவி கிடைக்கும் என்பதால், அதிகமானோர் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். இந்த ஆண்டு காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால், நிறைய பேர் இந்த தேர்வை எழுத வாய்ப்பு உண்டு. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு என்றே தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருப்பதால் இந்த குரூப் 2 தேர்வுக்கும் கடும் போட்டி இருக்கும். எனவே இதுவரை தயாராகதவர்கள் விரைவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment