டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த தகவலை, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி நடந்த இந்த தேர்வில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
கிராம நிர்வாக அதிகாரி (VAO) இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், வரைபடம் வரைபவர், தட்டச்சர், ஸ்டெனோ உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டிருந்தது.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்கள், tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த சரிபார்ப்பு நடவடிக்கைகள் முடிந்த பின்னர் தகுதிவாய்ந்த நபர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு துறைகள் பிரிக்கப்பட்டு பணியிடங்கள் வழங்கப்படும். இது தேர்வர்களின் தரம், பணியிடத்திற்கான தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.