Advertisment

TNPSC Group 4: விஏஓ தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு, மதிப்பெண் முறை... முழுத் தகவல்கள் இங்கே!

TNPSC group 4 VAO exam jos qualification age details for aspirants: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; தேர்வு தேதி மற்றும் தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC தேர்வு தேதி செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 7) அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்வுக்கு தயாராகுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகளை இப்போதுப் பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. TNPSC யானது, குரூப் 4, விஏஓ முதல் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதோடு, பிற அரசுத்துறை பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்காக TNPSC ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் நடைபெற உள்ள தேர்வுகளின் பட்டியலை வருடாந்திர அட்டவணையாக வழக்கமாக வெளியிடும். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் அட்டவணையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், விரைந்து தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதவி அரசு வழக்கறிஞர், ஜியாலஜிஸ்ட் மற்றும் ஐடிஐ முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதனால், பல மாதங்களுக்கு பின்னர் TNPSC இந்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளதால் குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான அறிவிப்பு, TNPSC வருடாந்திர அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டும். ஆனால் தற்போது வரை அறிவிப்பு வெளியாகததால், செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்வு டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரியில் நடத்தப்படலாம் என தெரிகிறது. எனவே இந்த தேர்வு குறித்து தேர்வர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இப்போது பார்ப்போம்.

குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் பதவிகள்

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)

குரூப் 4 தேர்வுக்கான கல்வித் தகுதி

குரூப் 4 தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி என்பது தான் அடிப்படை கல்வித் தகுதி. இருப்பினும் சில பதவிகளுக்கு கூடுதல் தகுதிகளை தேர்வர்கள் பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.

ஆனால், தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். எனவே அவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு உள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு

குரூப் 4 தேர்வுக்கான வயதுத் தகுதி பொதுவாக 18 முதல் 30 வரை ஆகும். இருப்பினும் சில பதவிகளுக்கு வயது வரம்பு தகுதியில் மாற்றம் உண்டு.

அதன்படி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.

அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு.

மேலும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

குரூப் 4 தேர்வின் தேர்வு முறை

குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  மேலும் 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், இதுவரை தேர்வுக்கு தயாராகாதவர்கள் விரைவில், தேர்வுக்காக தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். பத்தாம் வகுப்பு மட்டுமே தகுதி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வில் தகுதி பெற்றால் வேலை என்பதால் குரூப் 4 தேர்வுக்கான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment