குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றது. இதுவரை இந்த வழக்கில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த முறைகேடு தொடர்பாக தனித்தனியாக 3 வழக்குளை பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. வழக்கின் முக்கிய அச்சாணியாக கருதப்பட்ட ஜெயக்குமாரை ஆறு நாள் காவலில் எடுத்து விசாரிக்க இன்று சிபிசிஐடி அனுமதி வாங்கியுள்ளது. நீதிமன்றத்தில் தன்னை காவல்துறை துன்புறுத்துவதாகவும், மிரட்டுவதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் துன்புறுத்தலை தவிர்க்க வேண்டும் என்று சிபிசிஐடி காவல் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
2011 குரூப் 2 தேர்வு:
இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அத்தேர்வில் தேர்வாகி, இப்போது அரசு பணிகளில் பணி புரியும் குறிப்பிட்ட 12 பேரை நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.
முழு பின்னணி:
2011ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கடலூர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த 60 பேர் முதல் 100 இடங்களை பிடித்தனர். மேலும், கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த (ஒரே தெருவில் வசிக்கும்) 12 பேர் குரூப் 2தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது பல்வேறு துறைகளில் பல்வேறு பொறுப்புகளில் பணி செய்து வருகின்றனர்.
தற்போது, ஓம்காந்தனை ஆறு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 2011 ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதா? தேர்வு வினாத் தாள் வெளியானது எப்படி? எந்தெந்த அதிகாரிகள் இதில் தொடர்புடையவர்கள்? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
மேலும், இந்த 12 அதிகாரிகள் தவறு செய்ததற்கான வாய்ப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக இவர்களை கைது செய்யவும் சிபிசிஐடி முடிவெடுத்துள்ளது.