Advertisment

TNPSC Group 4, VAO தேர்வு; பாடத்திட்டம் குறித்த முக்கிய தகவல்கள்

TNPSC VAO group 4 exam syllabus details: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; பாடத்திட்டம் குறித்த முக்கிய தகவல்கள்

author-image
Ambikapathi Karuppaiah
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group 4, VAO தேர்வு; பாடத்திட்டம் குறித்த முக்கிய தகவல்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் பாடத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.

Advertisment

இதுவரை நடந்த குரூப் 4 தேர்வுகளில் பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கும், தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடப் பகுதியிலிருந்து 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.

இந்தநிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தமிழ் வழியில் பயின்றவர்களைக் கருத்தில் கொண்டும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தேர்வு முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி தமிழ் மொழித் தேர்வை தகுதித் தேர்வாக அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து தற்போது TNPSC வெளியிட்டுள்ள தகவலின் படி, குரூப் 4 தேர்வில் விருப்ப மொழிப்பாடப்பிரிவு நீக்கப்பட்டு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆங்கில மொழி பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த தேர்வுகளில் முதல் பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 40 வினாக்கள் எடுத்தால் மட்டுமே, அடுத்த பகுதியான பொது அறிவுப் பகுதி மதிப்பிடப்படும். இருப்பினும் தமிழ் மொழி பாடப்பகுதி வினாக்களும் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதாவது மொத்த மதிப்பெண்கள் தமிழ் மொழி மற்றும் பொது அறிவு பகுதிகளில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டுக் கணக்கிடப்படும்.

இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில்  வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் குரூப் 4 தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறலாம். இந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் 5255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது குரூப் 4 தேர்வில் ஆங்கில மொழிப்பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளதால், தமிழ் மொழி பாடப்பிரிவின் பாடத்திட்டம், ஏற்கனவே உள்ளதுபோல் தொடருமா? அல்லது அதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா என தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தேர்வு முறை

குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.

பாடத்திட்டம்

முதல் பகுதியில் தமிழ் மொழிப்பாடப்பிரிவில் இருந்து 100 வினாக்கள் இடம்பெறும். இதில் தற்போது 40 மதிப்பெண்கள் பெறுவது தகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் மொழிப்பாடப்பிரிவில், இதுவரை தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டு வந்தன. தற்போது தமிழ் மொழிப் பிரிவு தகுதித் தேர்வாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மொழிப் பிரிவு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் தேர்வாணையம் தரப்பில் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து எந்த புதிய அறிவிப்பும் இல்லாததால், பழைய பாடத்திட்டமே தொடர அதிகம் வாய்ப்புள்ளது.

பொது அறிவுப் பகுதியை பொறுத்தவரை 100 வினாக்களில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். பொது அறிவு பகுதியில் கீழ்கண்ட தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

அறிவியல் : இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்

நடப்பு நிகழ்வுகள் : வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் சில.

புவியியல் : புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள் மற்றும் சில.

வரலாறு : சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்

தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மற்றும் சில.

இந்திய அரசியல் : அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் சில.

பொருளாதாரம் : ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி மற்றும் சில.

இந்திய தேசிய இயக்கம் : தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு மற்றும் சில.

திறனறி வினாக்கள் : தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) போன்ற தலைப்புகளிலிருந்து வினாக்கள் வரும்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

இந்த குரூப் 4 தேர்வில், இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய 7 பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்த குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தமிழ்நாடு அரசு விதிகளின் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.

இதனிடையே, ஒவ்வொரு முறையும் குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வு நடக்காததால், ஏற்கனவே தேர்வுக்கு தயாரானவர்களோட, தற்போது தேர்ச்சி பெற்றவர்களும் போட்டியிடுவர். எனவே தேர்வு மிக போட்டி மிகுந்ததாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த தேர்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கானோர் தயாராகி வருவதால், இன்னும் தேர்வுக்கு தயாராதவர்கள் உடனடியாக தயாராகி கொள்ளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment