TamilNadu Election News : தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலின் வேகம் தமிழகத்தில் அதி தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சிகளின் சார்பாக கபசுர குடிநீர் உள்ளிட்ட நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க, முகக் கவசம், கபசுர குடிநீர், கிருமிநாசினிகள் உள்ளிட்டவைகளை மக்களுக்கு வழங்க, தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என திமுக சார்பாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பிட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எம்.பி.வில்சன் ஆகியோர் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விடம் அளித்தனர்.
திமுக சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்திற்கு பதிலளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, கொரோனா சூழலை மையப்படுத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் மக்களுக்கு கட்சிகளின் சார்பில் கபசுர குடிநீர் உள்ளிட்ட நலத்திட்டங்களை அளிப்பதில் அட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ஆர்.எஸ்.பாரதிக்கு சத்ய பிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில், மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி பெற்று அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் உதவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil