தமிழகத்தில் வரும் மே19ம் தேதி நடக்கவுள்ள நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவுபெற்றது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிக்கும், வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த 22ம் தேதி தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது.
நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, ம.நீ.மய்யம் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மேலும், சுயேட்சைகள் பலரும் ஆர்வமுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.
வேட்புமனு திரும்பப் பெற மே 2ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். மே 19ம் தேதி 4 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது பதிவாகும் வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்பட்டு ஒட்டுமொத்தமாக மக்களவைத் தேர்தல் முடிவோடு சேர்த்து தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும்.