Aiadmk Vs Ammk Assembly Election : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழு மூச்சாக களமிறங்கியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக அனைத்து கட்சிகளும் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுடன் கடந்த 27-ந் தேதி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல், தேசிய கட்சியாக பாஜகவுடன் அதிமுக நிர்வாகிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாஜக சார்பில் 60 தொகுதிகள் கேட்டதாகவும், மேற்கொண்டு சசிகலாவின் ஆதரவு பெற்ற டிடிவி தினகரனின் அமமுகவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களும் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து முதல்வராக முயன்ற அவர், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களுரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அதிமுகவில் இருந்து சசிகலா மட்டுமல்லாது அவரது தொடர்புடைய அனைவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனால், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன், ஜெயலலிதாவை முன்னிறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
தற்போது சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில், அதிமுகவினர் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க முயாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதற்கு எதிர் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், விரைவில் அதிமுகவை மீட்போம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சசிகலா ஆதரவுடன், அமமுக வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. ஆனால் பாஜக அமமுகவிற்கும் சேர்த்து அதிமுகவில் தொகுதிகள் கேட்பதால், அதிமுக, அமமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையே விரைவில் இணைப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன் கூறுகையில்,
அதிமுக, அமமுக இடையேயான இணைப்பு குறித்த தகவல் வெறும் யூகங்களாக மட்டுமே உள்ளது. வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த அமமுக தலைமையிலான கூட்டணி அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது. சில முக்கிய கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இது தொடர்பாக இறுதி முடிவு எடுத்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவை வரும் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் முயற்சி செய்து வருகிறோம்.
இதில் திமுகவை எதிர்க்கும் அனைவரும் எங்களது தலைமையை ஏற்றுக்கொண்டு வந்தால் அவர்களை வரவேற்க நாங்கள் தயார் என்றும் கூறியுள்ளார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். இதனால் நாங்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, தேர்தலுக்கு பின் அவர்கள் தலையில் இடியாக இறங்கப்போகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமமுக தலைமையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதிமுவுடன் இணைப்பு சாத்தியமாகும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.