Tamilnadu Assembly Election 2021 : தமிகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு முன்பே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியது. இதில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் ஒரு அணியும், திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, விசிக, உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் மற்றொரு அணியும் களமிறங்குகின்றன.
இதனை தவிர்த்து நேற்று அதிமுகவில் .இருந்து விலகிய சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, திமுகவில் இருந்து விலகிய இந்திய ஜனநாயக கட்சி என இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து 3-வது அணியை உருவாக்கியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவித்த பின்பு தலைமை கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதில் திமுக சார்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பாமகவிடம் பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அதிமுக தரப்பில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ . பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்குவதாக ஆளுங்கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட பாமக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக தற்போது சட்டசபை தேர்தலிலும் கூட்டணி சேர்ந்துள்ளது. தேர்தலுக்கு முன்னதாக பாமக சார்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் கூட்டணி தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தபோது, இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடும் வரை கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
அதனைத் தோடர்ந்து நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், காலையில் தொடங்கிய சட்டசபையில் உரையாற்றிய முதல்வர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத .இடஒதுக்கீடு அளித்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் குறைவு என்று பேசப்பட்டு வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதால், தொகுதிகளை குறைத்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.