Chennai central constituencies : சென்னை நகரின் முக்கிய தொகுதிகளில் ஒன்று சென்னை மத்திய தொகுதி. நகரின் முக்கியப் பிரபலங்கள் பலரும் வசிக்கும் பகுதிகள் இத்தொகுதியில் அடக்கம். துறைமுகம், எழும்பூர் (எஸ்சி), ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, அண்ணாநகர் வில்லிவாக்கம் என 7 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது மத்திய சென்னை.
இந்த முறை தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் ஒட்டுமொத்தமாக களம் இறங்கும் தொகுதி என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய சென்னை வசப்படுத்தியுள்ளது. இங்கு 4 முனைப்போட்டி பிரச்சாரத்திலேயே சூடுப்பிடிக்க தொடங்கி விட்டது.
திமுக -வின் கோட்டை என்று அழைக்கப்படும் மத்திய சென்னையில் இந்த முறை தயாநிதி மாறன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் சாம் பால், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கமீலா நாசர் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தெஹ்லான் பாகவி ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
திமுக - வின் கோட்டை என அழைக்கப்படும் இதே மத்திய சென்னை தொகுதியில் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் தயாநிதி மாறன் அதிமுக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் இப்போது கூட்டணி கட்சியான பாமக வுக்கு அதிமுக இந்த தொகுதியை ஒதுக்கியுள்ளது. இது மாறனுக்கு சாதகமாகவும் அமையலாம். பாதகமாகவும் மாறலாம். பாமக- வின் சாம் பால் அந்த பகுதியில் பிரபலமானர். சென்னையை பெருவெள்ளம் தாக்கிய போது மக்களுடன் இணைந்து களத்தில் இறங்கினார். இதை கூறிக் கொண்டு பாமக, அதிமுக வினர் தொடர்ந்து அந்த பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இவரை தவிர்த்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ சார்பில் தெஹ்லான் பாகவி ஆகியோருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிலும் பெண் வேட்பாளரான கமீலா நாசர் மத்திய சென்னை பகுதியில் இருக்கும் மகளிர் குழுவை சந்தித்து அவர்களின் அன்றாட பிரச்சனையை விசாரித்து வருகிறார்.
இந்த 4 முனைப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுவரை நடந்தது என்ன?
மத்திய சென்னையில் திமுக - வின் கொடி உயர பறந்தாலும், இங்கு காங்கிரஸ் மற்றும் அதிமுகவுக்கு மவுசும் அதிகம் தான். இதுவரை 7 முறை திமுக இங்கு வெற்றி வாகை சூடி இருக்கிறது. திமுக சார்பில் முரசொலி மாறன் 1996, 1998 , 1999 3 முறை இங்கு நின்று அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.
அவரின் மறைவுக்கு பின்னர் செண்டிமெண்டாக அதே தொகுதியில் கலைஞரின் ஆலோசனைப்படி தயாநிதி மாறன் நிறுத்தப்பட்டு 2 முறை வெற்றி பெற்றார். அ.தி.மு.க-வின் எஸ்.ஆர். விஜயகுமார் 3,33,296 வாக்குகள் பெற்று 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இதே தொகுதியில் தயாநிதி மாறனை தோற்கடித்தது அரசியல் களத்தில் யாருக்கும் யூகிக்காத ஒன்றாக இருந்தது.
மத்திய சென்னை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதியாக உள்ளது. எனவே இங்குள்ள இஸ்லாமியர்கள் ஓட்டுக்கள் கமீலா நாசர் மற்றும் அமமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ள சோசியலிஸ்ட் டெமாகிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவிக்கும் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எல். கே சுதீஷ் கணக்கு ஜெயிக்குமா? விஜபி-களின் தொகுதியான கள்ளக்குறிச்சி!
அதே நேரம் அதிமுக 2014 ஆம் ஆண்டும் தனித்து போட்டியிட்டு வெற்றி கண்டது, ஆனால் இம்முறை கூட்டணியான பாமகவுக்கு ஒதுக்கி இருக்கிறது, அவர்களை ஆதரித்து தேமுதிக மற்றும் அதிமுக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது. இவையெல்லாம் வைத்து கவனித்தால் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனுக்கு கடுமையான சவால் காத்திருப்பதே யூகிக்கக்கூடிய உண்மை.