TN Assembly Election VCK 6 Seat In DMK Alliance : தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில். அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில், தீவிரமாக களமிறங்கியுள்ளன. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் உள்ள, இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மமகவுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் மேல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே வரும் சட்டசபை தேர்தலில், விசிக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இதனால் அதிருப்தியடைந்த திமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 5 தொகுதிகள் ஒதுக்கப்படும். இல்லை என்றால் 2 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விசிக 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதனால் சட்டசபை தேர்தலில் கனிசமான தொகுதிகள் கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. ஆனால் திமுகவின் இந்த முடிவு விசிகவுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – விசிக இடையே நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தையின் இறுதியில், விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக திமுக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தொகுதி பங்கீட்டிற்கான ஒப்பந்தமும் இன்று கையெழுத்தானது. ஆனால் கடந்த தேர்தல்களில் 10 தொகுதிகள்ளுக்கு மேல் போட்டியிட்ட விசிகவுக்கு தற்போது 6 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது தொண்டாகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொகுதிபங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும், தமிழகத்தின் நலன் கருதி 6 தொகுதிகள் ஏற்றுக்கொண்டோம் என்றும் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.