Tamilnadu Puducherry Election : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் திமுக தலைமையில், காங்கிரஸ் கட்சியும், அதிமுக தலைமையில் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகளும் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தேர்தல் பணிக்குழுவை காங்கிரஸ் கட்சி சற்று முன் அறிவித்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள இந்த குழுவில், தலைவராக திக்விஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்களாக, பிரான்சிஸ்கோ சர்டின்ஹா மற்றும் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, ஏ.வி.சுப்ரமணியன், கே.ஆர்.ராமசாமி, வி.நாராயணசாமி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்கள் ஆகியோர் இநத குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"