ஓவியா... தமிழ் இளைஞர்களை மட்டுமல்ல, சிறுவர்கள், பெரியவர்கள், பெண்களுக்கு கூட பிடித்த பெயராகிவிட்டது. எல்லாம் ‘பிக் பாஸ்’ செய்த மாயம். சிறுவர்கள் கூட தாங்கள் விளையாடும் டேபில், ஓவியாவை ஸ்க்ரீன் சேவராக வைத்திருக்கிறார்கள். ஆர்மி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட ‘ஓவியா ஆர்மி’யில் உறுப்பினராக இருக்கின்றனர்.
ஓவியா வெளிப்படையாக நடந்து கொண்டதுதான் எல்லாவற்றுக்கும் காரணம். ஒரு விஷயம் நல்லதோ, கெட்டதோ... தன் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்தார் ஓவியா. அதுதான் அவரை எல்லோரும் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாட காரணமாகியிருக்கிறது. இது தெரிந்துகொண்ட பலர் அவரைப் போல நடிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், அது இயல்பாக வெளிப்படும்போதுதான் உண்மையாக இருக்கும் என்று உணர்த்தியவர் ஓவியா.
ஓவியா - ஆரவ் காதல் தான் இன்றும் ‘பிக் பாஸ்’ ரசிகர்களிடையே விவாதப் பொருளாக இருக்கிறது. ‘அங்கு அப்போதிருந்த சூழ்நிலைதான் ஆரவ் மீது எனக்கு காதலை ஏற்படுத்தியது. எனக்கு அவர் சப்போர்ட் பண்ணியது கூட காதல் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம். யார் மீதும் தவறு கிடையாது. ஆரவ் என்னை ஏமாற்றவில்லை. அவர் என்னை லவ் பண்ணணும்னும் இப்போது எதிர்பார்க்கவில்லை. தற்போது நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். மக்களிடம் இருந்து இவ்வளவு லவ் கிடைச்சிருக்கு. அதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்” என வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ஓவியா.
சம்பளத்தை உயர்த்திவிட்டார், அஜித், விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் போன்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்கிறார் ஓவியா?
‘நான் பணத்துக்காக வாழ்கிற பெண் கிடையாது. வாழ்வதற்குத்தான் பணம். பணத்தைவிட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். வாழ்வதற்கு ஏற்ற பணம் கிடைத்தால் போதும். அதேமாதிரி, அஜித், விஜய், சூர்யா கூட நடிக்க எந்த வாய்ப்பும் வரவில்லை. அப்படி வந்தால், கமிட்டானபிறகு கட்டாயம் சொல்வேன். ‘களவாணி 2’, கலகலப்பு 2’ படங்கள்ல கூட நான் நடிக்க மாட்டேன்னு சொன்னதா செய்திகள் வந்தன. எனக்குத் தெரிந்து நான் அப்படி எந்த படத்தையும் மறுக்கவில்லை.
ஆரவ் கூட சேர்ந்து நடிக்கவும் நான் ரெடி. இந்த ஹீரோ கூட மட்டும்தான் நடிப்பேன்லாம் எதுவும் கிடையாது. ஆரவ் கூட நடிக்க வாய்ப்பு வந்தா எனக்கு ஓகேதான். ஆனால், இதுவரைக்கும் அப்படி எந்த வாய்ப்பும் வரவில்லை. நடிப்பது என்னுடைய தொழில். அதில், அவருடன் நடிப்பேன், இவருடன் நடிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது” எனவும் ஓவியா தெரிவித்துள்ளார்.