ராஜ ராஜ சோழன் இந்துவா? என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் கஞ்சா கருப்பு பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “ஒரு நாள் தயாரிப்பாளரா இருந்து பாருங்க, அந்த வேதனை புரியும். ஆப்பிள் வாங்கிட்டு வா, சிக்கன் வாங்கிட்டு வா என்று சொல்வாங்க.
என்னால் சாப்பாடே இல்லாமல் என்ன நடிக்க முடியும். இன்று வீடு, காரை விற்றுள்ளேன். என் மனைவி ஒரு மருத்துவர். அவர் என்னை தளரவிடவில்லை.
என் தாயார் என்னிடம் கூறுவார், நீ காசு செலவழித்து வாழ்க்கையை படித்துள்ளாய். நீ முன்னேறுவாய் என்றார். நான் சினிமாவில் ஆரம்ப கால கட்டங்களில் இயக்குனர் பாலா மற்றும் அமீர் அலுவலகங்களில் ஆபிஸ் பாய் ஆக வாழ்க்கையை தொடங்கினேன்.
என் சொந்தப் பிரச்னை எழும்பூர்-மதுரை ரெயில் வரை இருக்கு. அதைப் பற்றி பேச வேண்டாம். ராஜ ராஜ சோழன் இந்து, இந்து இல்ல என இயக்குனர்கள் பழைய கதையை பேசுகின்றனர்.
வந்தோமோ, சம்பாதித்தோமோ, 10 வீட்டை வாங்கினோமோ என்று போகாமல் இது தேவையா? தமிழ் படத்தை பெங்களூரு, ஹைதராபாத் என்று போய் எடுக்கிறார்கள்.
ஏன் உங்களுக்கெல்லாம் மதுரை, தேனி, மானாமதுரை, சின்னாளப்பட்டி கண்ணுக்கு தெரியலீயா? அந்த இடங்களில் எடுத்த சண்டகோழி உள்பட எத்தனையோ படங்கள் ஹிட் ஆகியிருக்கு.
ஆக, தமிழ்நாட்டுல காச போடுங்க. இங்குள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை கொடுங்க” என்றார். தொடர்ந்து, “தாம் திரையில் போட்ட பணத்தை திரையில் போட்டுதான் எடுப்பேன். தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்” என்றார்.
அண்மையில் இயக்குனர் வெற்றிமாறன், “ராஜராஜ சோழனை இந்து மன்னனாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன” என்றார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்ற வார்த்தையை கிடையாது” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“