புற்றுநோய் தாக்குதலால் உயிர் காக்க போராடி வரும், நமது நெல்லை காப்போம் 'நெல்’ இரா.ஜெயராமனை நடிகர் கார்த்தி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை வாங்கியது. விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதமாக இப்படத்தை உருவாக்கியிருந்தது படக்குழு. படம் வெளியான நாள் முதல் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வந்தன.
படத்தில் விவசாயம் குறித்தும் விவசாயிகள் குறித்தும் அதிகம் பேசியிருந்த நடிகர் கார்த்தி, நிஜத்திலும் விவசாயிகளுக்கு உறுதுணையாக நின்றுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நமது நெல்லை காப்போம் ’நெல்’ இரா.ஜெயராமனை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தை உருவாக்கியவர் இரா.ஜெயராமன். இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, தமிழக அரசின் விருது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். இவரின் சேவையை உணர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், சேவையாளர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் என பலரும் நேரில் சந்தித்தும், நிதி அளித்தும் உதவி வருவதால் இவருக்கு சிகிச்சை தொடர்கிறது.
இந்நிலையில் இவரை தேனாம்பேட்டையிலுள்ள அப்பல்லோ கேன்சர் இன்ஸ்டிடியூட்டில், நடிகர் கார்த்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.