நடிகர் பார்த்திபனுக்கு ரூ 100 கோடி ரூபாய் கொடுத்து, அவரை இணைத்துக்கொள்ள விரும்பிய அரசியல் கட்சி எது? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
நடிகர் பார்த்திபன், ஒரு புதுமை விரும்பி, திருக்குறள் போல மிக சுருக்கமாக பேசி, சுவாரசியம் கொடுக்கக்கூடியவர் அவர்! ஆனால் ஈரோடு புத்தக திருவிழாவில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் ‘சினிமாயணம்’ என்ற தலைப்பில் விரிவாகவே பேசினார்.
பார்த்திபன் பேசுகையில், ‘என் தந்தை போஸ்ட் மேன் ஆக இருந்தார். அவரது வருமானத்தில் எங்கள் குடும்பம் வாழ்ந்தது. என் அம்மா ரொம்ப கண்டிப்பானவர். ‘அம்மா’ என்றாலே கண்டிப்பானவர் தானே..?’ என அரசியல் ‘டச்’ கொடுத்தவர், ‘மேலும் சின்னம்மாவும் எனக்கு உண்டு. சின்னம்மா எப்படிபட்டவர் என்றும் உங்களுக்கு தெரியும்!’ என கலகலப்பூட்டினார்.
தொடர்ந்து, ‘இப்படி அம்மா... சின்னம்மா கண்டிப்பில் நல்ல பிள்ளையாக வளர்ந்தேன். படித்தேன். என் உறவினர் ஒருவர் சினிமா கம்பெனிக்கு கார் ஓட்டி வந்தார். அவருடன் நான் ஷூட்டிங்கை பார்க்க போனேன்.
அப்போது நடிகர் நாகேஷ் நடித்த படம் எடுக்கப்பட்டது. இடைவேளை நேரத்தில் நாகேஷ் சேரில் உட்காருவார். அவருக்கு குடைபிடிப்பார்கள். விசிறி வீசுவார்கள். செம கவனிப்பு கவனித்தார்கள். இதையெல்லாம் பார்த்த எனக்கும் சினிமாவில் நுழைய ஆசை ஏற்பட்டது.’ என சினிமா ஆசை வந்த கதையை விவரித்தார் பார்த்திபம்.
‘பின்னர் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். எனக்கு போஸ்ட் மேன் (தபால்காரர்) வேடம் கிடைத்தது. என் அப்பாவும் தபால்காரர் தானே...? எப்படி பொருத்தமாக அமைந்திருந்ததை பாருங்கள்.’ என கூறிச் சிரித்தவர், ‘அதன் பிறகு எனது ஆசான் கே.பாக்யராஜிடம் சேர்ந்து அவருக்கு உதவியாளராக பணிபுரிந்தேன். நடிக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு நடிப்பதை விட டைரக்டர் ஆக தான் விருப்பம் அதிகம். ஆனால் பல படங்களில் நடித்து விட்டேன்.’ என்றார்.
சினிமா வாழ்க்கை பற்றி பகிர்ந்த பார்த்திபன், ‘மாவீரன் கிட்டு என்ற படத்தின் மூலம் எனக்கு தேசிய விருது கிடைத்தது. எந்த வித பதட்டமும் இல்லாமல் மேடை ஏறி விருது பெற்றேன். அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஹவுஸ் புல்’ படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்தது.
அப்போது தான் தேசிய விருதின் அருமை எனக்கு தெரிந்தது. இந்த விருதை பெற மீண்டும் 10 வருஷம் கஷடப்பட வேண்டியதிருந்தது.
இப்போது என்னிடம் 60 கதைகள் உள்ளது. இவற்றை எல்லாம் படம் எடுக்கு 600 கோடி ரூபாய் வேண்டும். இதற்கு நான் எங்கே போவேன்?’ என பொருளாதார கஷ்டத்தை சொன்னார்.
கடைசியாக அந்த அரசியல் ட்விஸ்டுக்கு வந்தார்... ‘ஒரு முக்கியமான விஷயத்தையும் இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. ஆனால் அரசியல் பேசுவேன்.
முன்பு கலைஞரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கைது செய்த போது இதை கண்டித்து நான் பேட்டி கொடுத்தேன். இதை கேட்டு ஜெயலலிதா, சிவகுமார் சாரிடம் பார்த்திபன் கூறியதை கேட்டீர்களா? என்று கேட்டு வருத்தப்பட்டாராம்.
இப்போது ஒரு நல்ல அரசியல் தலைவர் இல்லையே... என்று ஆதங்கம் எனக்கு. காமராஜரை போல... ஒரு கக்கனை போல இனி வருவது கஷ்டம்.’ என பேசினார் பார்த்திபன்.
பார்த்திபன் போகிற போக்கில் தனக்கு 100 கோடி விலை பேசப்பட்டதாக சொல்லிவிட்டார். அரசியல் வட்டாரத்தில் இப்போது, ‘பார்த்திபனை விலை பேசிய கட்சி எது?’ என்பது ஹாட் டாக் ஆகியிருக்கிறது. வேறு சில சினிமா பிரபலங்கள், ‘நமக்கு அப்படி இதுவரை யாரும் ஆஃபர் தரவில்லையே?’ என அங்கலாய்க்கவும் செய்கிறார்களாம்!
திரைத்துறை வட்டாரங்களில் பேசியபோது, ‘வெறும் பரபரப்புக்காக பொய் பேசுகிறவர் அல்ல பார்த்திபன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நெருக்கடிகளை சந்தித்த ஒரு கட்சித் தலைமை சார்பில் பார்த்திபனை சிலர் அழைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ரூ 100 கோடி பேசப்பட்டதா? என்பது தெரியவில்லை’ என்றார்கள் அவர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.