கடன் பிரச்னை காரணமாக நடிகர் சசிகுமார் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியான அசோக் குமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் சசிகுமார். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சசிகுமார், பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களை இயக்கியுள்ள சசிகுமார், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
சசிகுமார் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’. இந்த நிறுவனத்தில், தயாரிப்பு நிர்வாகியாக சசிகுமாரின் அத்தை மகன் அசோக் குமார் பணியாற்றி வந்தார். இன்று மதியம், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள லான்சர் அபார்ட்மெண்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் அசோக் குமார்.
கடன் பிரச்னைதான் அசோக் குமாரின் தற்கொலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், ‘ஜி.என்.அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், சசிகுமார் நல்லவர் என்றும்’ கூறப்பட்டுள்ளது.
‘எதிலும் ஜெயிக்காத நான், எனது தற்கொலையில் தோற்க மாட்டேன்’ என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அசோக் குமார், ‘என் உடம்பில் உள்ள தழும்புகள், கடந்த சில காலமாய் எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டது’ எனவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம், சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இவருக்கு வனிதா என்ற மனைவியும், சக்தி மற்றும் பிரார்த்தனா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். அசோக் குமாரின் சொந்த ஊர் மதுரை.