வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கம்பீரமாக பெரிய மீசையும் தாடியும் வைத்துக்கொண்டு, ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற வசனம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மொட்டை அடித்து எலும்பும் தோலுமாக இருப்பதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன், சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு தந்தையாக நடித்தவர் தவசி, கத்தையான பெரிய மீசை தாடியுடன் அவருடைய கம்பீரமான தோற்றம் சினிமா ரசிகர்களைன் பட்டென பதிந்துவிட்டது. அதிலும், அந்தப் படத்தில், அவர் கருப்பன் குசும்புக்காரன் என்று பேசிய வசனம் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.
நடிகர் தவசி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கொம்பன் என பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார். நடிகர் தவசி கடந்த ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்து வந்தார்.
இந்த நிலையில், நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு போதிய பனமின்றி தவித்து வருகிறார். பெரிய மீசை தாடியுடன் இருந்த தவசி புற்றுநோய் பாதிப்பால் மொட்டை அடிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக இருக்கும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வரும் நடிகர் தவசிக்கு திரையுலகினர் உதவி செய்யக் கோரி சமூக ஊடகங்களில் வீடியொ பரவி வருகிறது.
நடிகர் தவசியின் நிலையை அறிந்த நகைச்சுவை நடிகர் சூரி, நடிகர் தவசிக்கு முதல்கட்டமாக ரூ.20,000 நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தவசி மற்றும் அவருடன் இருக்கும் உதவியாளருக்கு 3 வேளை உணவு வழங்கப்படும். நடிகர் தவசிக்கு தேவைப்படும் அடுத்தடுத்த உதவிகளை செய்யத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.