நடிகர் விஜய் சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் தனது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பேரை வெளியேற்றக் கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் பெயரில் அவருடைய தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சி பதிவு செய்தார். இதற்கு விஜய் மறுப்பு தெரிவித்ததையடுத்து, விஜய் அரசியல் கட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணை செயலாளர் ஏ.சி.குமார் ஆகியோரை பொறுப்பில் நீக்கப்படுவதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் அறிவித்தார்.
ரவிராஜா, ஏ.சி.குமார் 2 பேரும் விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும்போது, சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
அவர்கள் இருவரும் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, நடிகர் விஜய் அவர்களிடம் வீட்டை விட்டு காலிசெய்யுமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் அறையை காலி செய்யாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை சாலிகிராமத்தில் விஜய்யின் வீடு விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் வருவதால், நடிகர் விஜய் சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் ரவிராஜா, ஏ.சி.குமார் ஆகிய 2 பேரையும் வீட்டில் இருந்து வெளியேற்றக் கோரி விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"