சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்ற வாரிசு திரைப்படத்தின் சூட்டிங்கின்போது நடிகர் விஜய் ரசிகர்களைச் சந்தித்து, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் முனைப்பில் படக்குழு தீவிரமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், சரத்குமார், சங்கீதா, ஷாம், ஜெயசுதா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: சினிமாவில் என்ட்ரி ஆகும் ரோஜா மகள் : வாரிசு நடிகருடன் ஜோடியா?
இந்தநிலையில், இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நடிகர் விஜயை சந்திக்க முயற்சித்து வந்தனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ரசிகர்கள் 500க்கும் மேற்பட்டோர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விஜயை சந்திக்க முயன்றனர். ஆனால் விஜய் யாரையும் சந்திக்கவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததோடு, ரசிகர்கள் காலை முதல் இரவு வரை இருந்து விஜயை சந்திக்க முயற்சி செய்ததால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்தநிலையில், நேற்று சூட்டிங் முடிந்து விஜய் வீட்டுக்கு செல்லும்போது, ரசிகர்கள் ஏராளமானோர் விஜயை பார்க்க காத்திருந்தனர். இதனையடுத்து விஜய் காரில் இருந்து இறங்கி ரசிகர்களைச் சந்தித்தார். விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் காட்சியளித்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதனை வீடியோவாக பதிவு செய்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil