நடிகை ரித்விகா தன்னை சமூக வலைதளத்தில் அவதூறாக பேசிய ஒருவருக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் என்றால் நானும் தலித்துதான் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ரித்விகா, இயக்குனர் ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் நடித்து தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்தார்.
மெட்ராஸ் படத்தை தொடர்ந்து, விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, இறுதிப் போட்டியில் பிக் பாஸ் டைட்டிலை வென்றார். இதன் மூலம் ரித்விகா தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
ரித்விகா, சினிமாவில் தனக்கான இடத்தை உறுதி செய்தாலும், சமூக ஊடகங்களில் அவ்வப்போது அவரை சாதி ரீதியாக அவரை தலித் என்று குறிப்பிட்டு சிலர் அவரைப் பற்றி அவதூறு பேசுவதும் நடந்துவந்தது.
இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல. இதற்கும் இனி வருமின் அதற்கான பதிலாகவும்... pic.twitter.com/6PF0sJj3Oo
— Riythvika✨ (@Riythvika) July 20, 2020
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய ஒருவருக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை ரித்விகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நடிகை ரித்விகா கூறியிருப்பதாவது, “தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க. ஒரு வகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி. பி.கு - தலித் பெண்கள் என்னை விட அழகு” என்று ரித்விகா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.