‘நடிகர் அஜித்தும் அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டார்’ என இயக்குநர் சுசீந்திரன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமா இணை தயாரிப்பாளரான அசோக் குமார், கந்துவட்டி கொடுமையால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அசோக்கின் தற்கொலை குறித்தும், அன்புச்செழியன் குறித்தும் திரைத்துறையினர் தங்களுக்குத் தெரிந்த கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்தும் அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டதாக இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அசோக் அண்ணனின் மரணம், தமிழ் சினிமாவின் கடைசி மரணமாக இருக்க வேண்டும். அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துக் கொள்கிறேன். ‘நான் கடவுள்’ நேரத்தில் இந்த அன்புச்செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் லிங்குசாமி சார், கெளதம் மேனன் சார், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேர், பல நடிகர்களும் இந்த அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன், இசையமைப்பாளர் இமானிடம் கூட எந்தப் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று மறைமுகமாக சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்கு காரணமான அன்புச்செழியன் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுக்கும், வருவாய்த்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதி பணம் அன்புவிடம் இருக்கும். தயவுசெய்து அவர் வீட்டிலும் ரெய்டு செல்லவும்” எனக் கூறியுள்ளார்.
சுசீந்திரனின் இந்த அறிக்கையால், அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.