Alya Manasa Baby Shower : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராஜா ராணி’ தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் கார்த்திக் மற்றும் செம்பாவாக நடித்த சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். நாட்கள் செல்ல செல்ல அவர்கள் இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அதனை ஆல்யாவும், கார்த்திக்கும் உண்மையாக்க, விஜய் டிவி நிறுவனமே அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தது. பின்னர் சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் வெளியில் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொண்டார்கள்.
பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ஆல்யா மானஸா வீட்டில் இவர்களது திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் குடும்பத்துடன் தொடர்பில்லாமல் போனது ஆலியாவுக்கு. திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா கர்ப்பமாக இருக்கிறார் என்று சஞ்சீவ் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே கோபத்தை மறந்து, ஆலியாவின் அப்பா தற்போது பேசுவதாகவும், இருப்பினும் அவரது அம்மா இன்னும் பேசவில்லை என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் சஞ்சீவ். அதோடு தனது குழந்தையை முதலில் அம்மா கையில் தான் தர வேண்டும் என ஆலியா ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஆலியாவின் ஆசை நிறைவேறியிருக்கிறது. அவர் நடுவராக இருக்கும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்வில் ஆல்யாவின் தாயை சமாதானம் செய்து, மகளுடன் சேர்த்து வைத்திருக்கிறது விஜய் டிவி, கூடவே வளைகாப்பும். பெற்றோர்களைப் பார்த்த ஆல்யா மகிழ்ச்சியில் திளைத்து கண் கலங்குகிறார். எப்படியோ குடும்பத்தை ஒன்று சேர்த்து விட்டது விஜய் டிவி.