Amala Paul : இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை அமலா பால். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், ‘ஆடை’ படத்தின் மூலம் தனது வேறொரு பரிமாணத்தை திரையில் காட்டினார். அந்தப் படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியிருந்தார். தற்போது அமலா பாலின் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக களம் இறங்கியிருக்கிறார் அமலா.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இயக்குநர் ஏ.எல். விஜய்யை அவர் மணந்திருந்தார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்தானது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு விஜய்யும் மறுமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன், “அமலா திருமணத்திற்குப் பிறகு நடிப்பைத் தொடர மாட்டேன் என ஒப்புக் கொண்டார். ஆனால் தனுஷ் தனது 'அம்மா கணக்கு' படத்திற்காக அமலாவை ஒப்பந்தம் செய்தார். பின்னர் நடித்த 'வி.ஐ.பி 2' திரைப்படம் தான் இந்த விவாகரத்துக்கு முக்கியக் காரணம் என்றார்.
இந்நிலையில், முன்னணி நாளிதழுக்கு அமலா பால் அளித்த பேட்டியில், விவாகரத்துக்காக வேறு யாரையாவது குறை கூறுவது முறையற்றது என்றும், தானே இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு தனுஷ் தனது நலம் விரும்பி எனவும், நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த பிளவு குறித்து தான் மேலும் எதுவும் பேச விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் இயக்கத்தில், பழம் பெரும் நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அமலா பால் நடிப்பது குறிப்பிடத்தக்கது.