இந்திய சினிமாவின் ‘பிக் பி’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் 75-வது பிறந்தநாள் அன்று, தன் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அமிதாப்பச்சன் கடந்த 5 வருடங்களாக தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடவில்லை. கடந்த 2012-ஆம் ஆண்டு தன்னுடைய 70-வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடிய அமிதாப்பச்சன், அதன்பிறகான பிறந்தநாள் தினங்களை தன் குடும்பத்தினருடன் மட்டுமே கொண்டாடினார்.
இந்நிலையில், இவரது 75-வது பிறந்தநாள் விழா, வரும் அக்டோபர் 11-ஆம் தேதி (புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்தநாளையும் அவர் தன் குடும்பத்தினருடன் செலவழிக்க திட்டமிட்டுள்ளார் அமிதாப்பச்சன். அதற்காக, செவ்வாய் கிழமை அவரது குடும்பத்தினர் அனைவரும் மும்பை காலிங் விமான நிலையத்திலிருந்து மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர்.
அமிதாப்பச்சன், மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி, ஆரத்யா, மகள் ஸ்வேதா நந்தா, பேத்தி நவ்யா நவேலி நந்தா ஆகியோரும் அவருடன் புறப்பட்டு சென்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ஐஸ்வர்யா ராய் தன் மகள் ஆரத்யாவை அழைத்து செல்லும் புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் விரும்பியுள்ளனர்.
தன் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அமிதாப்பச்சன், “என்னுடைய 75-வது பிறந்த நாளை எந்த வகையிலும் நான் கொண்டாடவில்லை. அதனால், அன்றையதினம் நான் ஊரில் இருக்க மாட்டேன்”, என பதிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.