இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையுலகில் காலடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக ரஹ்மான் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார். முதலில் ஹைதராபாத்தில் தனது கச்சேரியை நடத்திய ரஹ்மான், சென்னையில் வரும் 12ம் தேதி ஒ.எம்.சி.ஏ மைதானத்தில் இசைக் கச்சேரி நடத்துகிறார். இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய ரஹ்மான், "நான் இசையமைக்க ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டு காலம் என்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகள்.
திரைத்துறையில் இருப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சிந்தித்து எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். ஆன்மிக அரசியல் என்றால் சாதி மத சார்பற்ற அரசியல் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். அதன் அர்த்தம் என்ன என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்" என்றார்.