கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் புதிய படத்தில், அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் கே.எஸ்.ரவிகுமார் கடைசியாக இயக்கிய படம் ‘லிங்கா’. ரஜினி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹா என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர். ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த இந்தப் படத்தை, ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது.
‘லிங்கா’ தோல்வியைத் தழுவ, கன்னடத்தில் ‘கோட்டிகொப்பா 2’ என்ற படத்தை இயக்கினார் கே.எஸ்.ரவிகுமார். சுதீப், நித்யா மேனன் நடித்த இந்தப் படம், தமிழில் ‘முடிஞ்சா இவனைப்புடி’ என்ற பெயரில் ரிலீஸானது. டி.இமான் இசையமைத்த இந்தப் படத்தை, ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார். கடந்த வருடம் இந்தப் படம் ரிலீஸானது.
தற்போது ‘ஜெய் சிம்ஹா’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார். நந்தமுரி பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், ஜெகபதி பாபு, நடாஷா தோஷி, ஹரிப்ரியா ஆகியோரும் நடிக்கின்றனர். சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் கே.எஸ்.ரவிகுமார். ஆக்ஷன் எண்டெர்டெயினர் படமாக இது உருவாக இருக்கிறது. அரவிந்த் சாமி தற்போது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்கா முடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அடுத்ததாக, மணிரத்னம் இயக்க இருக்கும் மல்ட்டி ஸ்டாரர் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதன்பிறகு, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.