Bigg Boss 4 Tamil Review Day 51 : ஐம்பது நாள்களைக் கடந்து நேற்றுதான் ஒவ்வொருவருடைய முகத்திரையும் அட்டகாசமாகக் கிழிந்தது. நடிப்பு, சூழ்ச்சி, கோபம் என நேற்றைய பிக் பாஸ் வீடு நெகட்டிவிட்டிகளால் நிறைந்திருந்தாலும், நேர்மையின் வெளிப்பாடும் இருந்தது. ஒருவழியாக, வாங்கும் காசுக்கு ஏற்றபடி கன்டென்ட் கொடுத்துவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ். ஒரே பிரச்சனைதான், ஆனால் ஓஹோ என நகர்ந்த நேற்றைய எபிசோடினை அலாசிவிடுவோம் வாங்க.
அடுத்த நாள் நடக்கவிருக்கும் சம்பவம் பற்றித் தெரியாமல் சென்ற வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க் பற்றி ஆரி, பாலா, சனம் மற்றும் அனிதா மிகத் தீவிரமாக (மெய்யாலுமேபா) பேசிக்கொண்டிருந்தனர். 'இருக்கு, பெரிய சம்பவம் இருக்கு' என்று மனதிற்குள் மனக்கணக்குப் போட்டுவைத்திருப்பார் போல, ஆரியிடம் இருந்து கறக்க வேண்டியதெல்லாம் வாங்கிக்கொண்டு சரியான நேரம் பார்த்து சம்பந்தமே இல்லாமல் போட்டுக்கொடுத்தார் பாலா.
'ஆரி விட்டுக்கொடுத்ததால்தான் ரியோ கேப்டனாக பதவியேற்றார்' என்பதுதான் வாதம். உண்மையில் 'விட்டுக்கொடுத்தேன்' என்ற வார்த்தையை ஆரி சொல்லவேயில்லை. ரியோவின் உடல்நிலை பற்றி மிகத் தெளிவாக எடுத்துக் கூறியதோடு மட்டுமில்லாமல் தாமாக விலகிக்கொண்டதாகத்தான் ஆரி கூறினார். இதற்கு சனம் ஷெட்டி ஜால்ரா வேறு. ஆனால், அடுத்தநாள் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஆரியை கார்னர் செய்தபோது சனம் ஷெட்டி, அனிதா ஏன் ஆரிக்கு சப்போர்ட் செய்யவில்லை என்பது தெரியவில்லை. தனக்கு எதற்கு வம்பு என அனிதா தெளிவாக விலகியிருந்தார். சனம் ஷெட்டி வழக்கம்போல புரிந்தும் புரியாமலும் உளறிக்கொண்டிருந்தார். பாலாவின் செயல், வன்முறை தூண்டலின் உச்சம்.
'ரியோவுக்கு விட்டுக்கொடுத்தேன்' எனக் கூறியதோ அவரை மட்டம் தட்டியதோ ஆரி அல்ல. சொல்லப்போனால், 'குடும்பமாக நினைத்துக்கொண்டிருக்கும் அந்த குழுவைக் கலைக்காமல் விடமாட்டேன்' என்ற சபதத்தை எடுத்தது பாலாதான். (அடுத்தநாள் என்ன அழகா பிளேட்டை கவுத்தாருபா!). ஆனால், அவ்வளவு கலவரத்திலும், பாலா கூறிய இந்த வார்த்தைகளை ஆரி வெளிப்படுத்தாமல் இருந்த பண்பு பாராட்டுக்குரியது. இப்போதாவது ஒரு குறும்படம் கிடைக்குமா பாஸு?
வார்த்தைகளின் உச்சம் வரை நீண்டது மட்டுமல்லாமல், கால்களைத் தூக்கிக் காட்டும் வரை நீண்டது பாலாவின் வன்முறை நாடகம். அனைவரின் முன்னாள் கால்களை தூக்கி காட்டியவர், மன்னிப்பு மட்டும் தனியாகக் கேட்பதா? (என்ன ஒரு வில்லத்தனம்!). ஆனால், இதனை டிராமா என ஆரி பாலாவிடமே நேரடியாகக் கூறியதை நிச்சயம் பாலா நினைத்திருக்க மாட்டார். இவர்களின் அடிதடி சண்டை ஒருபுறம் இருக்க, அர்ச்சனா, சம்யுக்தா, ரியோவின் புரணிகள் மறுபுறம் (இப்போவே கண்ண கட்டுதே!)
சரி அதெல்லாம் இருக்கட்டும். இவ்வளவு நாள் அனைவர்க்கும் ரம்யா மீதான பிம்பமும் நேற்று உடைந்தது. 'வேற லெவல் கன்டெஸ்டென்ட்', 'ரொம்ப சிந்திக்குறாங்க', 'புத்திசாலி பொண்ணு', 'பயங்கரமான ஆளுப்பா' என ரம்யா மீதான ஓவர் பில்டப், ஓவர். சம்பந்தமே இல்லாமல் பாலா ஆரி பிரச்சனைக்குள் என்ட்ரியாகி, தான் என்ன சொல்கிறோம் என்று அவருக்கே தெரியாமல் உளறிக்கொண்டிருந்தார் ரம்யா. அதிலும், கையைத் தட்டிவிட்டுப் பேசியதெல்லாம் டூ மச். ஆரி இடத்தில் ஒரு பெண் அதுவும் மீரா மிதுனாக இருந்திருந்தால், கையை தட்டிவிட்ட பிரச்சினையைத் தன்னை தட்டிவிட்டுச் சென்றதுபோல் பெரிய சீனையே உருவாகியிருப்பார். மிஸ் ஆகிடுச்சு!
இந்த வாரம் எவிக்ஷனில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம் மற்றும் நிஷா நாமினேட் செய்யப்பட, பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாகத் தன்னைக் காப்பாற்றி வேறொருவரை நாமினேட் செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 'இதுதாண்டா சான்ஸு' என நினைத்த அனிதா அந்த வாய்ப்பினை பெற்று சம்யுக்தாவை நாமினேட் செய்துவிட்டார். இதற்கிடையில் நிஷா போட்ட நாடகம், அடடடடா! நாமினேட் செய்யப்பட்டவர்களின் உரையாடல்கள் படம் போட்டுக் காட்டப்பட்டபோது, மற்றவர்களின் முக பாவனைகளும் உடல் மொழியும் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் யார் என்பதை அப்பட்டமாகக் காட்டியது. இதற்கே இப்படியா! இன்னும் கன்ஃபெஷன் ரூம் அட்ராசிட்டிகள் எல்லாம் பார்த்தால் என்ன செய்வார்களோ! ஹ்ம்ம்... அடிச்சிக்காம விளையாடுங்க ஏட்டைய்யா!
இந்த வாரம் நூலிழையில் எஸ்கேப் ஆகிவிட்டார் அனிதா. அதனால், அவருக்கு பதில் நாமினேட் செய்யப்பட்ட சம்யுக்தா இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது நம் கணிப்பு. உங்களுக்கு எப்படி?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.