Bigg Boss 4 Tamil Review Day 29: கொளுத்திப் போடுவதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றிருப்பர் போல சுச்சி! என்ன ஒரு கேம் ப்ளே! இவ்வளவு நாள் எங்கம்மா இருந்தீங்க? (லீக்ஸ் பத்தியெல்லாம் கேக்கவே இல்லைங்க). சுரேஷ், பாலா, அனிதா என ஒவ்வொருவரிடமும் அவர் சொன்ன ஸ்டோரிஸ் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டன. ப்ப்ப்பா.. சரி சட்டுனு ஃபிளாஷ்பேக்குள்ள போகலாம் வாங்க.
'நீங்க இங்கிலிஷ்ல சொன்னது புரியல, தமிழ்ல சொல்லுங்க' என சுச்சி கொடுத்த பட்டதை பற்றித் தெளிவாகத் தெரிந்துகொண்டார் ரியோ. புது வரவுகள் வந்தாலே மக்கள் என்ன நினைக்கிறார்கள், தாங்கள் மக்கள் மனதில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள ஹவுஸ்மேட்ஸ் தவிப்பது இயல்புதானே. ஆனால்,அவற்றை சுச்சி சொல்லிய விதம் அல்டிமேட்.
ஷிவானி பாலாவை இணைத்து வெளியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது முதல் அர்ச்சனாவின் டாமினேட் கேரக்டர் வரை அனைத்தையும் சொன்னதெல்லாம் சரிதான் ஆனால், அனிதா அழுவது மக்களுக்குப் பிடிக்காமல் இல்லை என்று ஏதோ பற்றவைத்தாரே, அதுதான் என்ன என்று புரியவில்லை. அனிதாவிற்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கும் சண்டை தூண்டிவிடும் யுத்தியோ! போகப்போகத் தெரியும்.
இந்த வார கேப்டனாக சம்யுக்தா பதவி ஏற்றபின், முதலில் க்ரூப்பிஸத்தை உடைக்கவேண்டும் மற்றும் சாப்பாட்டுக்கான சண்டையைத் தீர்க்கவேண்டும் என்று சின்சியராக பேசிக்கொண்டிருந்தார். 'கட்டிப்பிடி வைத்தியம்' எடுத்துக்கொண்டால் க்ரூப்பிஸம் சரியாகிவிடுமா என்ன? அதைத்தான் சம்யுக்தா தீர்வாகச் சொன்னார். பார்ப்போம் ஒர்க் அவுட் ஆகுமா இல்லையா என்று. ஆனால், அமைதியாக இருந்துகொண்டு வீட்டில் க்ரூப்பிஸத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு சம்யுக்தாவுக்குத்தான் இருக்கிறது. (என்னவென்று சொல்வதம்மா!)
சனம் ஷெட்டியும் பாலாவிடம் நல்லுறவு உருவாக்கும் முயற்சியில் அவ்வப்போது குதிக்கிறார். ஆனால், அத்தனை முறையும் மூக்கு உடைபட்டு தனியே நிற்கிறார். (உங்களுக்கு வேற ஆளே கிடைக்கவில்லையா சனம்?). 'உன்னை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நீ ஏன் இந்த வாரம் வீட்டைவிட்டுப் போகலனு வெறுப்பா இருக்கு' என இதைவிட வெளிப்படையாக இன்சல்ட் பண்ணவே முடியாது. இது எளிய தமிழ் வார்த்தைகள்தானே. அதுவுமா சனம் ஷெட்டிக்கு புரியவில்லை!
அவ்வளவு சீரியசாகப் பேசிவிட்டு, 'ஜாலியா ஒரு கிக்' என்று கூறினால், இதை எப்படி எடுத்துக்கொள்வது? பாலாவின் வெறுப்பு வட்டத்துக்குள் தானாகவே சென்று சிக்கிக்கொள்கிறார் சனம். அது 'தறுதலை' வரை கூட்டிச் சென்றிருக்கிறது. அப்போப்போ ரியாக்ட் செய்யாமல், வார்த்தைகளைப் புரிந்து நேரமாகி ரியாக்ட் பண்ணுவது வீட்டில் உள்ள அனைவர்க்கும் சலிப்பை ஏற்படுத்துகிறது போல. இந்த 'தாமதமாகும் டாம் அண்ட் ஜெர்ரி' சண்டை, ஏன் திரும்பத்திரும்ப பாலா வலைக்குள் சனம் செல்கிறார் என்ற கோபத்தைத்தான் தூண்டுகிறது.
ஆனாலும், சைடு கேப்பில் ஆஜீத்தின் கோபம்! (சிட்டிக்கு இரண்டாவது முறையாக உணர்ச்சி வந்துடுச்சு). என்னதான் வகுப்பின்போது சனம் பேசினாலும், அதற்குக் காரணமாக இருந்த பாலாவை யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. இது, மற்ற ஹவுஸ்மேட்ஸுக்கு சனம் மீதான வெறுப்பைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், அதே நிலைதான் மக்களின் சப்போர்ட்டையும் பெறுவதற்குக் காரணமாக இருக்கிறது. இதுபற்றி மற்ற ஹவுஸ்மேட்ஸுக்கு சுச்சி சொல்லவில்லை போல! (எங்கே செல்லும் இந்த பாதை..)
'பாலாவிடம் ஆக்ரோஷமாக சண்டைபோட்டுவிட்டு, அவர் இல்லாதபோது (அப்போதுதான் வெளியில் தனியாக அழுதுகொண்டிருந்தார் பாலா), அவரைப் போலவே நடித்துக் கிண்டல் செய்து கலாய்த்துவிட்டு, வெளியே வந்து நீ என் புள்ளைன்னு சொல்லுறது எப்படி உண்மைன்னு நம்புறது' என பாலா முன்பே சுச்சி கேள்வி கேட்க, அர்ச்சனாவின் திகைத்த முகத்தைப் பார்க்க முடிந்தது. அதைச் சமாளிக்க முடியாமல், 'நீ உன் கேமை விளையாடு, என்னை அம்மாவாகப் பார்க்காத' என்றுகூறி அர்ச்சனா திணறுவதையும் நம்மால் உணர முடிந்தது. எப்படிப் பார்த்தாலும் தலைகீழாக நின்று (கேள்வி கேட்காதீங்க! சும்மா ஒரு ஃப்ளோல சொல்லுறதுதான்) யோசித்தாலும் அம்மா-மகன் உறவு அர்ச்சனா பாலாவுக்குள் இருப்பதை உணரவே முடியவில்லை (அதெல்லாம் தானா வரணும்).
'சும்மா புகுந்து விளையாடு' என்று ஷிவானி-பாலா பற்றி சுச்சி கூறியபோது, மற்றவர்கள் எமோஷனோடு விளையாடக் கூடாது என்று தெளிவாக யோசித்ததற்குப் பாலாவுக்குப் பாராட்டுகள். ஆனால், அடுத்த நாளே அப்படி நடந்துகொள்ளவில்லையே பாலா! 'இப்படியே தினமும் காலையில் வந்து என்னை எழுப்பிவிடு' என்று ஷிவானியை பாலா சீண்டிக்கொண்டிருக்க, அதற்கு சம்யுக்தாவும் ஜால்ரா அடித்துக்கொண்டிருந்தார். இதுக்கு எது பாலா வெள்ளையும் சொல்லையுமா அலையனும்!
எப்போவோ நடந்த மியூசிக்கல் சேர் விளையாட்டில், சுரேஷ் தாத்தா வெற்றிபெற்றதற்கு சம்யுக்தாவும், பாலாவும்தான் காரணம் என்று தாத்தாவுக்குத் தெரியவர, செம்ம கடுப்பானார் அவர். இதையே யோசித்துக்கொண்டு தூங்காமல் திரிந்த அவரை சுச்சியின் 'தக்காளி' வார்த்தைகள் கோபத்தின் உச்சத்தை அடைய வைத்தது. இதனால், தான் என்ன பேசுகிறோம், யாரைப் பேசுகிறோம் என்பதில் நிலை தெரியாமல் கத்திக்கொண்டிருந்தார். ஆழம் தெரிந்துதான் காலை வைத்திருக்கிறார் சுச்சி. அப்படித்தானே!
ஆனாலும் பாலா ஷிவானி பற்றி சுச்சி கூறியது பிடிக்கவில்லை என்றால் அப்போதே சுச்சியிடம் சொல்லியிருக்கலாமே தாத்தா? அதென்ன ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் மட்டும் மற்றவர்கள் பேசியதைச் சொல்லிக்காட்டுவது? பாருங்க ஷிவானிக்கு எதுவுமே புரியல! (ஆஹான்!)
ஆரம்பத்திலிருந்தே ஆரியை வேறு கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டிருந்த ஹவுஸ்மேட்ஸுக்கு, அவர் செய்யும் எந்தவொரு செயலும் பிடிக்காமல் போகிறது. ஆனால், அவர் கூறுவதில் தவறெதுவும் இல்லை. ஆரி விஷயத்தில் தனக்குப் பிடித்தவர்களைக் கேள்வி எழுப்பாமல், குறைந்தபட்சம் நல்லவிதமாகக்கூட எதுவும் கூறாமலும் இருக்கிறார் சம்யுக்தா. கேப்டன் என்கிற பொறுப்பை ஒருதலைபட்சமாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறாரோ என்றுதான் தோன்றுகிறது. (நல்லது சொன்னாலே இப்படித்தான்பா!)
ஆரி, அனிதா, அர்ச்சனா, சுரேஷ், சனம், பாலா மற்றும் சோம் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இதில் சுரேஷ் அல்லது சோம் வெளியேறுவதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இனிமேலாவது சோம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து தன் ஆட்டத்தை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். இவர்களில் யாரை காப்பாற்றவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.