Bigg Boss 5 Tamil Cold war between Priyanka and Raju Akshara Tamil News : ஆரம்பத்திலிருந்தே பலருடைய கதைகளுக்கு டிஸ்லைக் போட்டுக்கொண்டு வந்த ராஜுவிற்கு, டிஸ்லைக் கிங் என்றே பட்டம் கொடுத்துவிடலாம். அந்த அளவிற்குக் கதையில் சுவாரஸ்யத்தையும், உத்வேகத்தையும் எதிர்பார்க்கிறார் ராஜு. எல்லோருடைய வாழ்க்கையும் ஒரேபோன்று இருக்காது. மேலும், தாங்கள் கடந்து வந்த பாதைகளைக் கோர்வையாக்கி, சுவாரசியமாகப் பகிர அனைவராலும் முடியாது. இப்படி ஏராளமான விஷயங்களுக்கு மத்தியில், எல்லோரிடமும் திரைக்கதையைக் கச்சிதமாக எதிர்பார்ப்பது சரியா? அப்படி என்ன பிரியங்கா கதையில் சுவாரசியம் குறைந்துவிட்டது? ஏன் அவருக்கு டிஸ்லைக் கொடுத்தார்? எதனால் அக்ஷரா கதைக்கு லைக் கொடுத்தார்? பார்க்கலாம்…
வழக்கமாக முதல் வாரத்திலேயே அணைத்து போட்டியாளர்களின் கதையையும் பகிர்ந்துவிடுவார்கள். ஆனால், இந்த சீசனில் பெரும்பாலான போட்டியாளர்கள் புதிய முகங்கள் என்பதாலோ என்னவோ ஒவ்வொருவருடைய கதைக்கும் குறைந்தது 10 நிமிடங்களாவது நமக்கு ஒளிபரப்பி, இரண்டு வாரங்களுக்கு இழுக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில், ஒவ்வொருவருடைய கதைக்கும் மற்ற போட்டியாளர்கள் லைக், டிஸ்லைக், ஹார்ட் கொடுக்கலாம் என்று கூறியிருந்த நிலையில், ராஜுதான் டிஸ்லைக் ஆப்ஷனை ல் முதலில் பயன்படுத்தினார். தொடர்ச்சியாகப் பலருக்கும் டிஸ்லைக் கொடுத்து வந்த நிலையில், நேற்றைய எபிசோடில் அக்ஷராவுக்கு லைக்கும், பிரியங்காவிற்கு டிஸ்லைக்கும் கொடுத்திருந்தார் ராஜு. இதனால், ராஜுவிற்கும் பிரியங்காவிற்கும் பனிப்போர் ஆரம்பமானது.
முதலில் அக்ஷரா தான் கடந்த வந்த பாதைகளைப் பகிர்ந்து கொண்டார். சிறு வயது முதலே வசதியாக வாழ்ந்து பழகியவருக்கு மற்றவர்களைப் போன்று கடினமான பாதைகள் இல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டார். ஆனால், தன்னுடைய தந்தையின் இறப்பு அவருடைய ஆழ்மனதில் நீங்கா காயமாக இன்றைக்கும் இருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொண்டார். என்னதான், வசதி வாய்ப்புகள் பெரிதளவில் இருந்தாலும், தந்தையின் இழப்பு மற்றும் அதனால் அவருக்கு உருவான உணர்வுகளைப் பணத்தால் ஈடுசெய்ய முடியாது. இந்த நிதர்சனத்தை வீட்டில் உள்ள மற்றவர்கள் புரிந்துகொள்ளாமல், அக்ஷராவை ஆட்டிடியூட் காட்டுகிறார் என்று மட்டுமே விமர்சனம் செய்கின்றனர்.
தன்னுடைய அப்பா இல்லாத குறையை, தன் சகோதரன் சிறிதளவும் காட்டவில்லை என்பது பலருக்குமான இன்ஸ்பிரேஷன்தான். மேலும், தான் அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்றதையும் எளிமையான தோரணையில்தான் பகிர்ந்துகொண்டார். இந்தக் கதையில் இருந்த ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்துகொண்ட ராஜு, அக்ஷராவிற்கு லைக் கொடுத்தார். ஆனால், எப்போதும் பலருடைய கதைகளுக்கு டிஸ்லைக் கொடுத்தவர் ஏன் எதுவுமே இல்லாத அக்ஷராவிற்கு லைக் கொடுத்தார் என்று ராஜுவிடமே பிரியங்கா கேட்டுக்கொண்டிருந்தார்.
இதனை அனைவரிடமும் பகிர்ந்துகொண்ட ராஜு, பிரியங்காவின் கதைக்கு டிஸ்லைக் கொடுத்தார். அதற்கான காரணமாக, அக்ஷராவின் கதைக்கு தான் லைக் கொடுத்ததை விமர்சனம் செய்தது தனக்குப் பிடிக்கவில்லை என்றுகூறி டிஸ்லைக் கொடுப்பதாகக் கூறினார் ராஜு. மேலோட்டமாக ஒருதலைபட்சமான முடிவாக இருந்தாலும், அவரவர்களுடைய பார்வையில் எடுக்கப்படும் முடிவு மட்டுமே இறுதி. இத்தனை பேருக்கு டிஸ்லைக் கொடுத்தவருடைய கதைக்காகத்தான் போட்டியாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.