Bigg Boss 5 Tamil Day 25 Review Isaivani Thamarai Madhu : இசைவாணியை எப்படியாவது மாட்டிவிட்டு குளிர்காயவேண்டும் என்று பிக் பாஸ் நினைத்துவிட்டார் போல. தொட்டதுக்கெல்லாம் கேராவை ஃபோகஸ் செய்து, அவரை நோஸ்கட் செய்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். மேலும், தாமரையின் விஸ்வரூபம் நாளுக்கு நாள் கொஞ்சம் மோசமாகிக்கொண்டே போகிறது. இதுபோன்ற தருணத்தில் அதிலும் நெருப்பு வாரத்தில் அபிஷேக் இருந்திருந்தால் நிச்சயம் பிக் பாஸ் வீடு தீ பற்றிக்கொண்டிருக்கும்.
ஓபன் பண்ணதுமே, தன்னை வீட்டை விட்டு அனுப்பிவிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார் தாமரை. நூறு நாள் நிச்சயம் இருப்பேன் என்று தன்னம்பிக்கையோடு உலா வந்துகொண்டிருந்த தாமரையின் இந்த மனமாற்றத்திற்கு காரணம், சுருதியுடனான சண்டை. இதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை பிக் பாஸ் கொடுத்தால் இரண்டே நொடியில் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும். இதை வைத்தாவது கன்டென்ட் கொடுங்க என்று நினைத்த பிக் பாஸ், இன்றுவரை வாயைத் திறக்காமல் இருக்கிறார். நீங்க நடத்துங்க பிக் பாஸ்!
'இந்த நெருப்பு நாணயத்தை ஏன்டா வைத்திருக்கிறோம்' என்று மனமுடைந்து ஃபீல் பண்ணுகிற அளவிற்கு இசைவாணியை வைத்து பந்தாடிவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ். மது மற்றும் பாவனி சுவாரசியமாக விளையாடாமல் இருந்ததனால், இரவு முழுவதும் விழித்திருக்கவேண்டுமென அவர்களுக்கு தண்டனை கொடுத்த பிக் பாஸ், கூடவே இந்த வாரத்தின் நாணய தலைவியான இசைவாணியையும் உறங்காமல் உட்கார வைத்துவிட்டார் பிக் பாஸ். 'எந்தத் தவறும் செய்யாமல் எனக்கு ஏன்யா இந்த தண்டனை' என்றபடி, அமர்ந்திருந்தார் இசைவாணி. பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இல்லாமல் இசைவாணி சற்று உறங்கிவிட, இதுதான் சான்ஸ் என்று பிக் பாஸ் தன் நாயை அவுத்துவிட்டார். செய்யாத தவறுக்கு தண்டனை, தன்னை மீறி வந்த உறக்கம் என அல்லாடிப்போனார் இசைவாணி.
இதுவே, விடிந்த பிறகு பிரச்சனையாக உருவெடுத்தது. தான் இந்த வாரத்தின் வீட்டின் தலைவி என்பது அப்போதுதான் மதுவுக்கு நினைப்பு வந்திருக்கும் போல. இசைவாணி தூங்கியதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'உங்களால்தான் நானும் தூங்கவில்லை. அட போங்கப்பா' என்று நினைத்த இசைவாணி, மீண்டும் ஒருமுறை கண் அசந்துவிட, 'கொஞ்சமாவது எனக்கு மரியாதை கொடு' என்று மது கெஞ்சிக்கொண்டிருந்தார். இப்படியே சம்பவங்கள் தொடர, மீண்டும் டைனிங் ஏரியாவில் இசைவாணியை அனைவரும் டார்கெட் செய்தனர்.
இசைவாணி கிச்சன் பொறுப்பைக் கைப்பற்றியதிலிருந்தே அண்ணாச்சிக்கு என்னவோ ஒரு கடுப்பு. 'வீட்டிலேயே சின்னப்பெண் நமக்குத் தலைவியா?' என்கிற எண்ணத்தினால் உருவான வெறுப்பா என்பது தெரியவில்லை. எப்போதும் சரியாகப் பேசும் அண்ணாச்சி, இசைவாணியிடம் மட்டும் ஈகோ கலந்த வார்த்தைகளில் பேசுகிறார். மேலும், 'இசைவாணிக்கு அந்த நாணயம் எப்படி வந்தது' என்று மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது நிச்சயம் கோபத்தை வரவழைக்கும். இப்படி பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்தால், ஒரு முறையாவது எதிர்த்துப் பேசத்தான் செய்வார்கள். ஆனால் அதையும், 'இசைவாணி பேசுவது தங்களுக்கு ஹர்ட் ஆகும் தொனியில் இருக்கிறது' என்று புகார் செய்கின்றனர். இதையெல்லாம் சபை முன்புதான் சொல்லவேண்டும் என்கிற அவசியமில்லையே. எங்கே அவர் தவறாகவோ அல்லது கடுமையாகவோ பேசியிருந்தாரோ, அப்போதே சுட்டிக்காட்டியிருக்கலாமே!
இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து, பட்டிமன்றத்திற்குத் தயாரானார்கள் நம் கிராம மற்றும் நகரவாசிகள். ஆட்டம் சூடுபிடித்திருக்கும் இதுபோன்ற தருணத்தில் அபிஷேக் இல்லாமல் போனதுதான் வருத்தம். பட்டிமன்றத்தில் முதல் தலைப்பு, தங்களின் அடையாளத்தை மாற்றிய இருப்பவர்கள் நகரத்தைச் சேர்ந்தவர்களா அல்லது கிராமத்தைச் சேர்ந்தவர்களா என்பதுதான். இதற்கான முதல் வாதத்தைத் தொடங்கிய ராஜு, சுருதியை சில்க் சுமிதாவோடு ஒப்பிட்டுப் பேசியது உண்மையில் தவறாகவே தோன்றியது. நடிகை என்கிற வாதத்தில் ஒப்பிட்டிருந்தால் பரவாயில்லை, ஆனால் உடை அணிவதோடு ஒப்பிட்டிருந்தது மிகவும் தவறானது. இதன் தொடர்ச்சியாகத் தாமரையும் 2,3 பிட் தூக்கலாகப் போட, நகரத்தினர் கொதித்து எழுந்தனர்.
ஏற்கெனவே தாமரைக்கு சுருதி மீதுள்ள கோபம் இந்த வாதங்களில் நன்றாகவே தென்பட்டது. மேலும், அடக்கமாக இருப்பது பற்றியெல்லாம் ஏதேதோ அள்ளிவீசிக்கொண்டிருந்தார் தாமரை. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'அடக்கமாக இருப்பது என்றால் என்ன?' என்று சிபி கேட்க, அவ்வளவுதான் தாமரையின் கோபம் நெற்றிக்கண் திறக்கும் அளவிற்கு முற்றியது. ஆனால், இறுதிவரை அந்த அடக்கம் என்றால் என்ன என்ற கேள்விக்கும், தாமரை அடக்கமாக இருக்கிறாரா என்ற வினாக்கும் விடைதான் தாமரையிடமிருந்து தெளிவாக வரவில்லை. வரவர தாமரை மக்களின் வெறுப்புகளை சம்பாதித்து வருகிறார். ஜூலி போல மொக்கை வாங்கிவிடுவாரோ? ஆனாலும், நாகரிகம் என்பது நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது என்று பன்ச் கூறி நகரத்தினருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கி ஒரு வழியாகப் பாராட்டுகளைப் பெற்றார் இசைவாணி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.