/tamil-ie/media/media_files/uploads/2021/12/Pav-1.jpg)
Bigg Boss 5 Tamil Day 65 Review Pavani Reddy Amir Abinai Priyanka
Bigg Boss 5 Tamil Day 65 Review Pavani Reddy Amir Abinai Priyanka : 100 நாட்களை நோக்கி நகர நகர சுவாரசியம் அதிகரிக்கும் என்று நினைத்தால், இந்த சீசன் எதிலும் ஒட்டாத தாமரை இலை நீர் போலவே உள்ளது. இருக்கு ஆனா இல்லை என்பதுபோன்ற கன்டென்ட். முன்பு ப்ரோமோவிலாவது பரபரப்பாக ஏதாவது இருக்கும். இப்போது அதற்கும் பஞ்சம். சென்ற சீசனில் ஆரி போன்று மக்கள் மனதில் நச்சென பதியும் போட்டியாளர் யாரும் இல்லை என்றாலும், ஒரு சிறிய அளவில் மக்களை இம்ப்ரெஸ் செய்வார்கள் என்று எதிர்பார்த்த ராஜு, சிபி எல்லோரும் என்ன செய்கிறார்கள் என்பதும் புரியவில்லை. சரி நேற்றைய எபிசோடின் கன்டென்ட்டைப் பார்க்கலாம்.
65-ம் நாள் காலை, அக்ஷரா மற்றும் பாவனியின் சண்டையோடு ஆரம்பமானது. பிறகு, அக்ஷராவைப் பற்றி அபிநயிடம் நியாயம் கேட்டுக்கொண்டிருந்தார் பாவனி. தன்னிடம் நடந்துகொள்வது போன்று வருணிடமும் இதேபோன்று மோசமாக நடந்துகொள்வாரா என்று பாவனியின் கேள்விக்கு, வேறு என்ன சொல்லப் போகிறார். வழக்கம் போல பாவனிக்கு ஜால்ராதான் தட்டிக்கொண்டிருந்தார் அபிநய். உங்களைபோலதானே அக்ஷரா-வருண் நட்பும் இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் புரிதல் போலதான் அவரிடமும் இருக்கும் பாவனி. இதைப் புரிந்துகொண்டால் நல்லது.
என்னதான் சொன்னாலும், இந்த சீசன் எப்போதுமில்லாத அளவிற்குக் குழப்பமான சீசன். அதிலும், காதல் விஷயத்தில் ஒன்றுமே புரியவில்லை. நேற்றைய எபிசோடில் தனக்கு பாவனியைப் பிடித்திருக்கிறது என்று அமீர் சொல்ல அதற்கு வெட்கப்பட்டு பாவனி சிரிக்க என்று பிரியங்காவிற்கு ஒரே கூத்தாக இருந்தது. தன்னுடைய தொழிலையே மாற்றி விடுவார்கள் போல என்று பிரியங்கா புலம்பியதை நம்மால் உணர முடிந்தது. என்ன செய்வது... அதே ஃபீலிங்தானே நமக்கும். அபிநயிடம் சற்று டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணும் பாவனி, அமீரின் சேட்டைகளை ரசிக்கச் செய்கிறார். இது எங்கு முடியப்போகிறதோ!
இதையடுத்து ராஜுவிடம் பாவனியை தனக்குப் பிடிக்கும் என்பது பற்றியும் அதனால் அபிநய் டென்ஷன் ஆகிறாரோ என்ற சந்தேகத்தைப் பற்றியும் புலம்பிக்கொண்டிருந்தார் அமீர். ஆனால், ஆரம்பத்திலிருந்தே தனக்கு பாவனி மீது நல்ல அபிப்ராயம் இல்லை என்றும் ஒருமுறை அதுபோல உணர்ந்தால் அதிலிருந்து தன்னுடைய விருப்பத்தை மாற்றிக்கொள்ள நேரம் ஆகும் என்றும் ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் ராஜு. இப்படி நேற்றைய எபிசோடில் பாதி நேரம் பாவனியை வைத்து குழப்பமான முக்கோண காதல் கதைதான் ஓடியது.
அடுத்ததாக டாஸ்க் என்கிற பெயரில் வீட்டில் இருப்பவர்கள் தனி காட்சிகளாக அமைத்து, பிரச்சாரம் செய்யவேண்டும் என்று கொடுக்க, போட்டியாளர்கள் அனைவரும் அரசியல்வாதிகளாக மாறினார்கள். ஏற்கெனவே ஏகப்பட்ட அரசியல் விஷயங்கள் வீட்டிற்குள் இருக்க, இது என்ன பிரமாதம்? தனியாக டாஸ்க் வேறு அவசியமா? அவரவர்களுக்குப் பிடித்த நபர்களோடு ஒன்றிணைந்து, தங்கள் கட்சிக்கென பெயர், கொள்கை ஆகியவற்றைத் தீவிரமாக டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தனர்.
ஒவ்வொரு கட்சியைப் பற்றிய இன்ட்ரோவில் உண்மையில் சஞ்சீவினி ஸ்க்ரிப்ட் மற்றும் பேசிய விதம் மிகவும் அருமை. சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்றால் சும்மாவா? ஆனால், வந்த நாள் முதல் தன்னை கண்டாலே சஞ்சீவிற்கு பிடிக்கவில்லை என்று தன்னுடைய நண்பர்களோடு பகிர்ந்துகொண்டார் நிரூப். உங்களுடைய உயரம் அவருக்கு உறுத்தலாக இருந்திருக்கும் போல நிரூப். அதற்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. என்றாலும், சஞ்சீவும் ஏதோ ஒரு டார்கெட்டோடுதான் விளையாடிக்கொண்டிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்!
இதையடுத்து கொடி நடும் போட்டி நடைபெற்றது. ஆரம்பத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்த விளையாட்டில், திடீரென அண்ணாச்சிக்குள் தூங்கிக்கொண்டிருந்த மிருகம் வெளியே எட்டிப் பார்த்தது. விடாபுடியாக தாமரையிடம் சண்டையிட்டு கோடியை நட்டார் அண்ணாச்சி. என்னதான் இருந்தாலும், இவ்வளவு கோபம் ஆகாது அண்ணாச்சிக்கு. அதிலும், தாமரை என்பதால்தான் இத்தனை கோபம். இதுவே, அக்ஷரா அல்லது பாவனி தாமரையின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் இந்த அளவிற்கு இமான் அண்ணாச்சி ரியாக்ட் செய்திருக்க மாட்டார்.
எப்போதும் சின்ன சின்ன விஷயத்திற்குக் கூட அவ்வளவு கோபப்படும் தாமரை, இம்முறை கொஞ்சம் அடக்கியே வாசித்தார். ஆனால், இது விளையாட்டிற்கு செய்யவில்லை என்பதைத் தெளிவாக அண்ணாச்சியிடமே சொல்லி வாக்குவாதத்தை நிறைவு செய்தார். அண்ணாச்சி இதுபோன்று செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று நேரடியாக இமானிடமே சென்று அவர் செய்தது தவறு என்று சுட்டிக்காட்டினார் அமீர். பிரியங்கா அணிபோல முதுகுக்குப் பின்னால் பேசாமல், அண்ணாச்சியிடமே அவர் செய்தது தவறு என்று அமீர் கூறியது பாராட்டுக்குரியது.
அக்ஷரா ஜெனிலியாவா அல்லது சந்திரமுகியா என்பது தெரியவில்லை என்று ரெஸ்ட் ரூமில் பிரியங்கா புலம்பி நடித்து காட்டியது ரசிக்கும் விதமாக இருந்தது. இந்த சீசனில் பாசிட்டிவிட்டியும் இல்லை நெகட்டிவிட்டியும் இல்லை. காத்து வாக்குல ரெண்டு காதல், தாமரையும் அண்ணாச்சியும் என ஒருவிதமான சீசனாக ஏதோ நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் இருக்கிற ஒரு மாதத்தில் இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறார்கள் என்பதை பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.