Bigg Boss Tamil 3 Episode 79: பிக் பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறிய சேரன், தற்போது ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். இதனால் போட்டியாளர்களின் உண்மை முகம் சேரனுக்கு தெரிய வருகிறது.
Advertisment
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளில் ஃப்ரீஸ், ஃபார்வேர்டு, ரீவைண்ட், ஸ்லோ மோஷன் என்று, போட்டியாளர்களுக்கு டாஸ்க்குக்கு மேல் டாஸ்க் கொடுத்துக் கொண்டிருந்தார் பிக் பாஸ். ஃப்ரீஸில் இருக்கும் போது, பிக் பாஸ் வீட்டிற்கு முகெனின் அம்மா நிர்மலாவும், சகோதரி ஜனனியும் வருகை தந்தனர்.
அம்மாவைப் பார்த்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தார் முகென், அவரின் அம்மாவும் அழ, இதனை சேரன் ரகசிய அறையிலிருந்து பார்த்தபடி உணர்ச்சி வசப்பட்டார். அம்மாவையும், சகோதரி ஜனனியையும் தூக்கிக் கொண்டு வீட்டில் வலம் வந்தார் முகென். அனைவருடனும், நிர்மலா, ஜனனி ஆகியோர் பேசினர். இறுதியில், வீட்டை விட்டு வெளியேறும் போது கொடி கட்டி பறக்க வேண்டும், எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது என்று மகன் முகெனுக்கு அறிவுரை வழங்கிவிட்டு கண்ணீருடன் சென்றார் நிர்மலா.
அதன் பின்னர் நடந்த டாஸ்க்கில், வனிதா, சாண்டி, முகென் ஆகியோர் ஒரு அணியாகவும், ஷெரின், தர்ஷன், கவின் ஆகியோர் மற்றொரு அணியாகவும் பிரிந்து விளையாடினர். போட்டியின் நடுவராக லாஸ்லியா இருந்தார். ஒரு கட்டத்தில் உள்ள பந்தை எடுத்து தங்களுக்குரிய பெட்டியில் போட வேண்டும் என்பது தான் இதன் டாஸ்க். இறுதியில் இந்த டாஸ்க்கில் வனிதா அணி வெற்றி பெற்றனர்.
பிக்பாஸ் இல்லத்தில் எனக்கு நடந்த கொடுமை: ஜாங்கிரி மதுமிதா பேட்டி
பின்னர் ரகசிய அறையில் இருக்கும் சேரன், போட்டியாளர்களிடம் தான் கேட்க விரும்பும் கேள்விகளை கடிதத்தின் மூலம் கேட்டிருந்தார். லாஸ்லியாவுக்கு அவர் அனுப்பியிருந்த கடிதத்தில், ”உன்னுடைய ஞாபகங்கள் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. நீ எப்படி இருக்கிறாய்? ஏதாவது ஒரு நேரத்தில், இப்போது சேரன் அப்பா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்றோ, நான் இல்லாத வெற்றிடத்தையோ உணர்ந்தாயா” என்று கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த லாஸ்லியா, “அவர் இல்லாத வெற்றிடத்தை நான் உணர்ந்திருக்கிறேன். அவருக்குப் பதிலாக நான்தான் சென்றிருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, “கவின் அவர்களுக்கு, வணக்கம் தம்பி. அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவருமே தங்களது விருப்பங்களை வெளியில் வந்து பேசிக் கொள்ளலாம். இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று. அப்படியிருந்தும், லாஸ்லியாவிடம் இங்கேயே முடிவை சொல்ல சொல்வது நியாயமா? அதை வலியுறுத்தலாமா? செலிப்ரேட் பண்ணலாம் என நீங்கள் அவரை தூண்டுவது ரொம்ப தவறாக உள்ளது. ஸ்டாப் பண்ணுவீங்களா” என்ற கேள்வியைக் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த கவின், “நிறுத்தியாச்சு…போட்டிக்காக மட்டுமே இதனை நிறுத்தினோமே தவிர, இருவரது உணர்வுகளும் உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் யோசித்தோம்” என்றார்.
வனிதாவுக்கு சேரன் எழுதியிருந்த கடிதத்தில், ”நான் வந்த மறுநாள் அமைதியாக யார் கிட்டேயும் பேசாமல், தலைவர் போட்டியைக் கூட நிராகரித்து விட்டு வேலை செய்தீர்கள். பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அந்த வனிதா நியாயமாக இருக்கிறாங்க. இனிமேல், தனது கருத்தை சுருக்கமாக கூறும் வனிதாவாக இருப்பீர்களா” என்று கேட்டிருந்தார்.
”இப்படித்தான் இந்த போட்டியை விளையாட வேண்டும் என்று இத்தனை நாட்கள் எனக்கு தெரியாமல் போய்விட்டது. நாமினேஷனில் எப்படி பேச வேண்டும் என்று நான் இப்போது தான் தெரிந்துக் கொண்டேன். யாரிடம் கூறினால் புரிந்துகொள்வார்களோ அவர்களிடம் மட்டுமே கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும் என்று நான் இப்போது தெரிந்துக் கொண்டேன்” என்று அதற்கு வனிதா பதிலளித்தார்.
பின்னர் சேரன் ரகசிய அறையில் தான் இருக்கிறார் என்று வனிதா யூகித்துவிட்டார். ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என்பது வனிதாவுக்கு விளங்கவில்லை. இருப்பினும் மற்ற போட்டியாளர்களுக்கு இந்த சந்தேகம் எழவில்லை.