Bigg Boss Tamil 5 Review Day 15 Kamal Hassan Nadiya Eviction : இரண்டாவது நபர் வெளியேற்றம் ஆனால் முதல் எவிக்ஷன் நடைபெற்றது நேற்று. அவர் மௌனத்தில் ஏதோ உள்ளது. பயங்கரமான பிளானிங் இருக்குமோ. நிச்சயம் இவர் இறுதி வரை வருவார் என்று நடியா மீது பலரும் பல விதமான நம்பிக்கையும் கற்பனைகளும் வைத்திருந்த நிலையில், முதல் நபராக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும், அபிஷேக்கின் நடிப்பு, பிரியங்காவின் ஷாக் என ஏராளமான சுவாரசியங்கள் நிறைந்த எபிசோடாகவே நேற்று இருந்தது.
நிகழ்ச்சி தொடக்கத்திலேயே யாரெல்லாம் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்கிற கேள்வியை கமல் முன்வைக்க, தாமரை, அபிஷேக் கொஞ்சம்கூட பார்த்ததே இல்லை என்று கூறினார். 'இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு' என்கிற கேள்வி எழாமலில்லை. அதிலும் கடந்த வருடம் லாக் டவுனில் ஊரே அடங்கி உட்கார்ந்து இருக்கும்போது, வழியே இல்லாமல் டிவி பெட்டியை திறந்து வைத்து சீரியல்கள் பார்த்தவர்களின் வரிசையில், பிக் பாஸ் நிகழ்ச்சியும் நிச்சயம் இருக்கும். இப்படி பச்சையா நடிக்குறீங்களே பாஸ்! தாமரையாவது இங்கு வருவதற்கு முன்பு சில எபிசோடுகளை பார்த்ததாக கூறினார். ஆனால், அபிஷேக் சுற்றினார் பாருங்க ஒரு முழு நீள ரீல். 'வாய்ப்பில்லை ராஜா.. உங்க நடிப்புக்கு நீங்க எங்கேயோ போகணும்' என்பதைத் தவிர வேறு என்ன கூறுவதற்கு இருக்கு. அவர் வெளியே வந்தால் எண்ணிலடங்கா குறும்படங்கள் காத்திருப்பது மட்டும் உறுதி.
ஏன் பார்த்ததில்லை என்பதற்கான காரணத்தைக் கேட்டபோது, 'கமலின் சினிமா முகம்தான் தனக்குப் பிடிக்கும். அதைவிட்டுவிட்டு இந்த சின்னதிரையைத் தேர்ந்தெடுத்ததனால் பிடிக்கவில்லை' என்று கூறினார் அபிஷேக். அதற்கு, 'என்னைக் குழப்பிய கூட்டத்தில் நீங்களும் ஒருவரா?' என்று கமல் நேரடியாக அபிஷேக்கை பார்த்துக் கேட்டது வேற லெவல். இதனைத் தொடர்ந்து, வீட்டில் யாரெல்லாம் ஸ்ட்ராட்டஜி பின்பற்றுகிறார்கள் என்கிற கேள்வியை முன்வைத்தபோது, ஐக்கி பெரி தன்னுடைய பார்வையைப் பகிர்ந்துகொண்டிருந்தபோது, அபிதேக் யாரையோ பார்த்து சைகை செய்வதுபோல் கண்ணடித்தார். பார்க்கத்தான் முடியவில்லை!
யாரைப் பார்த்து அப்படி கண்ணடித்தார் என்றதற்கு, ராஜு என்று ராஜூவே வியக்கும் அளவிற்கு ஒரு பிட்டை போட்டார் அபிஷேக். 'என்ன அபிஷேக் இப்படி மாட்டிகிட்டே இருக்கியேப்பா. பாவம்யா நீ' என்றுதான் சொல்ல தோன்றியது. இன்னும் கொஞ்சம் அவருக்கு பயிற்சி தேவைப்படுகிறது. வரும் நாள்களில் இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ!
அடுத்ததாக, வீட்டில் யாருடன் சேரவே முடியவில்லை என்று கேட்டதற்கு, பாவனி அண்ணாச்சியைக் கூறியது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. பெரிய வயது அண்ணன், மிகவும் சிறிய வயது தங்கை என்று அவர்களின் அன்பைப் பார்த்து சில்லறைகளையெல்லாம் சிதற விட்டோமே. அதெல்லாம் பொய்யா? இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியலப்பா என்பதுபோல் அண்ணாச்சியின் முகம் கேள்விக்குறிகளால் நிறைந்திருந்தது. எங்களுக்கும்தான் அண்ணாச்சி பாவனி என்ன பேசினாலும் புரியவில்லை. டிவிக்குள் நுழைந்துதான் அவர் பேசுவதைக் கேட்கவேண்டும் போல! அந்த அளவிற்கு முனுமுனு என்று தனக்குள்ளேயே அவ்வப்போது பேசிக்கொள்கிறார் பாவனி.
அடுத்தபடியாக, கடந்த இரண்டு வாரங்களாக தங்களின் சொந்த கதைகளைப் பகிர்ந்துகொண்டதில், யாருடைய கதை பிடித்தது, யாருடைய கதை கனெக்ட் செய்துகொள்ள முடியாதபடி இருந்தது என்ற கேள்வியை முன்வைத்தபோது, பெரும்பாலான போட்டியாளர்கள் நமிதாவின் கதையைத்தான் தேர்வு செய்தனர். அவர் வீட்டில் இல்லாதபோதும், அவருடைய கதை நமக்கு மட்டுமல்ல வீட்டில் இருப்பவர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், எளிமையான கதையாக சிபியின் கதையைப் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்தனர்.
அப்போது, அக்ஷரா இசைவாணி, தாமரை ஆகியோர்களின் கதைகளை தன்னால் கனெக்ட் செய்துகொள்ள முடியவில்லை என்றும் இசைவாணி உள்ளிட்டோர் அக்ஷரா கதையை கனெக்ட் செய்துகொள்ள முடியவில்லை என்றும் பகிர்ந்துகொண்டனர். இவற்றுக்குக் காரணம், வாழ்க்கைமுறை புரிதல்தான். என்றாலும், இப்போது ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும், நிரூப் தன்னால் கனெக்ட் செய்துகொள்ள முடியாத கதையாக பிரியங்கா பெயரை சொன்னது நமக்குமே ஷாக்காக தான் இருந்தது. அப்போது ப்ரியங்காவின் ரியாக்ஷனை சரியாக கேப்ச்சர் செய்து எடிட்டிங்கில் இணைத்துக்கொண்டார் நம் எடிட்டர்.
வீட்டில் விருப்பமான நபர் மற்றும் காணாமல் போன இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில், அதிக வாக்குகளை ராஜு பெற்ற போதிலும் இமான் அண்ணாச்சியை தேர்வு செய்து கூறினார் தேர்வுக் குழுவின் மெம்பர் அபிஷேக். ஆனால், பிரேக் நேரத்தில் அப்படியே ராஜூவை தனியே இழுத்துச் சென்று 'உங்களுக்குத் தான் அதிக வோட் வந்தது. ஆனால், இமான் பெயரைத் தான் குழு தேர்ந்தெடுத்தது' என்று கூற, 'என்னவா கூவுறான்' என்கிற டெம்ப்லேட் நினைவுக்கு வந்தது!
அடுத்ததாக மதுமிதா, வருண் காப்பாற்றப்பட்டனர். சின்னப்பொண்ணு காப்பாற்றப்பட்டார் என்றது, உடைந்து அழுந்தது, அனைவரின் மனதையும் கரைய வைத்தது. இறுதியாக அபிஷேக் மற்றும் நடியா இருவர் இருக்க, அபிஷேக் காப்பாற்றப்பட்டார். அப்போது, அபிஷேக்கின் முகபாவனைகளை என்னவென்று சொல்வது. 'தப்பிச்சோம்டா சாமி' என்றுகூறிக்கொண்டே ஒரு ஓரமாகச் சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார். அதிக எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், நடியா வீட்டை விட்டு வெளியேறினார். கமல் கூறியது போல, வீட்டில் அவருடைய இருப்பு தெரியாமலேயே போனதுதான் இந்த எவிக்ஷனுக்கு காரணம். முதல் வார இறுதியில் நமிதா சொல்லாமல்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார், வெளியேற்றப்பட்டாரா என்றும் தெரியவில்லை. இந்நிலையில், வீட்டின் முதல் எவிக்ஷன் நேற்று நடைபெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.