சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் லீக் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 3000 இணையத்தளங்களுக்கு தடை விதித்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய்குமார் நடித்துள்ள 2.0 நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இந்திய சினிமாவிலேயே அதிக அளவிலான பட்ஜெட் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது தான். மேலும் 3டி முறையிலேயே ஷூட்டிங் செய்யப்பட்டு 3டி மற்றும் 2டி முறையில் வெளியாகும் முதல் இந்திய படமும் இது தான் என்ற பெருமை கொண்டுள்ளது 2.0.
3000 இணையத்தளங்களுக்கு தடை
இந்நிலையில், இப்படத்தை பெரும் பாடுபட்டு தயாரித்துள்ள லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தது. அந்த மனுவில், மிக பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக இணையதளத்தில் வெளியிடப்பட்டால் மிக பெரிய அளவில் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தடுக்கப்பட்டு, முறைகேடாக வெளியிடுவதை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர், 2.0 படத்தை இணையதளத்தில் வெளியிட 3000 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இப்படம் ரிலீசுக்கு முன்பே 150 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. எனவே ரிலீசுக்கு பின்பும் பல கோடி வசூலை எட்டி பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.